மழைக்காலக் கூட்டத் தொடர் நிறைவு – நாடாளுமன்றம் காலவரையின்றி ஒத்திவைப்பு
மழைக்காலக் கூட்டத் தொடர் முடிவடைந்ததைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.
கடந்த மாதம் 21-ஆம் தேதி தொடங்கிய மழைக்காலக் கூட்டத் தொடரில், பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தொடக்கம் முதலே இரு அவைகளிலும் அமளி செய்தன. இதனால் கூட்டங்கள் பலமுறை தடைபட்டன.
இன்று (கடைசி நாள்) காலை 11 மணிக்கு இரு அவைகளும் கூடியபோது, வழக்கம்போல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை முதலில் 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டு பின்னர் காலவரையின்றி நிறுத்தப்பட்டது. மாநிலங்களவைவும் எதிர்க்கட்சிகளின் அமளியால் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
அதன் பின், பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்கள் ஊழல் அல்லது கடுமையான குற்றச்சாட்டில் சிக்கி தொடர்ந்து 30 நாட்கள் சிறையில் இருந்தால், அவர்களை பதவி நீக்கம் செய்யும் வகையிலான 3 மசோதாக்களை பரிசீலனைக்காக கூட்டுக் குழுவிற்கு அனுப்புவதற்கான தீர்மானத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்வைத்தார். கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் குரல் வாக்கெடுப்பில் அந்தத் தீர்மானம் நிறைவேறியது.
மேலும், ஆன்லைன் விளையாட்டு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை மசோதா மாநிலங்களவையில் எந்த விவாதமும் இல்லாமல் நிறைவேற்றப்பட்டது. இதன் பின்னர் மாநிலங்களவையும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
மொத்தம் 21 நாட்கள் நீடித்த இந்த மழைக்காலக் கூட்டத் தொடரில், மக்களவை வெறும் 37 மணி நேரமும், மாநிலங்களவை 41 மணி நேரமும் மட்டுமே செயல்பட்டன. இதற்கிடையில், மக்களவையில் 12 மசோதாக்களும், மாநிலங்களவையில் 14 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.