இனி சிறையிலிருந்து யாரும் ஆட்சி செய்ய முடியாது: பதவி பறிப்பு மசோதா பற்றி பிரதமர் பேச்சு
அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் மற்றும் பிரதமரின் பதவி பறிப்பு மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதைப் பற்றி விளக்கம் வழங்கினார் பிரதமர் நரேந்திர மோடி. பிஹாரில் இன்று நடந்த தனது பேச்சில் அவர், “ஊழலை ஒழிக்க தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முன்னெடுப்பாக இதைச் செய்கிறோம். இனி சிறையிலிருந்து யாரும் ஆட்சி செய்ய முடியாது,” என்று தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு பிஹாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு பிரதமர் மோடி இரண்டாவது முறையாக அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். திறந்த வாகனத்தில் நடந்த ரோடு ஷோவில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமருடன் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி கலந்து கொண்டனர்.
கயாஜியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.13,000 கோடி மதிப்புள்ள நலத்திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
பிறகு பிரதமர் கூறியதாவது: ஒரு அரசு அதிகாரி சிறையில் அடைக்கப்பட்டால், அடுத்த 50 மணி நேரத்தில் அவரது வேலை பறிக்கப்படுகிறது. ஆனால் ஒரு முதல்வர், ஒரு அமைச்சர் அல்லது பிரதமர் கூட சிறையில் இருந்தால் அரசாங்கத்தை நடத்த முடிகிறதா? சில நாட்களுக்கு முன்பு சிறையிலிருந்து அரசு உத்தரவு பறந்ததை நாம் பார்த்தோம். தலைவர்களுக்கு இப்படியொரு மனப்பாண்மை இருந்தால், ஊழலை எப்படிச் சரிசெய்வது? இதனால் ஊழலுக்கு எதிரான புதிய சட்டத்தை கொண்டு வர முயற்சி செய்கிறோம். அதில் பிரதமரும் அடங்குகிறார்.
ஊழல் வழக்கில் சிறைக்குச் செல்லும் அரசியல்வாதிகள் தங்கள் பதவியை இழக்க வேண்டும். இதற்காக இந்த மசோதா முன்வைக்கப்பட்டுள்ளது. எனவே, ஊழல் அரசியல்வாதிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் இடதுசாரிகள் எதிர்ப்புக் காட்டுகின்றனர், என்றும் பிரதமர் கூறினார்.
ஊழல் அல்லது கடுமையான குற்றச்சாட்டுகளுக்காக 30 நாட்கள் சிறைக்காவலில் வைக்கப்பட்டால் ஒரு அமைச்சர், ஒரு மாநில முதல்வர் அல்லது நாட்டின் பிரதமர் பதவி பறிக்கப்படுவார். இதற்காக மக்களவையில் இந்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் மேலும் கூறியதாவது: “மக்கள் வெறும் வாக்கு வங்கி அல்ல. பிஹாரில் எடுக்கப்படும் எந்தத் தீர்மானமும் வீணாகாது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நேரத்தில், பயங்கரவாதிகளை இந்த மண்ணில் இருந்து தூள் தூளாக்குவேன் என்று நான் சபதம் செய்தேன்; அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது.”
அதே நேரத்தில் பிரதமர் எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்தார்: “பிஹார் மக்களை ராஷ்டிரிய ஜனதா தளம் வாக்கு வங்கியாக மட்டுமே பார்க்கிறது. அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்காக எதுவும் செய்யவில்லை. கயா போன்ற நகரங்கள் இருளில் மூழ்கி இருந்தன. கல்வி மற்றும் வேலைவாய்ப்பு இல்லாமல் பல தலைமுறைகள் இடம்பெயர வேண்டிய கட்டாயத்தில் இருந்தன.”