ஜன் விஷ்வாஸ் மசோதா 2.0 அறிமுகம்: சிறிய குற்றங்களுக்கு தண்டனையை ரத்து செய்ய விதிகளில் மாற்றம்
கடந்த 2023-ம் ஆண்டு, ஜன் விஷ்வாஸ் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து பல்வேறு திருத்தங்களைச் சேர்த்து, ஜன் விஷ்வாஸ் மசோதா 2.0 நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மசோதாவை தாக்கல் செய்து விளக்கினார்.
இந்த மசோதா, தற்போதுள்ள சட்டங்களில் சிறிய குற்றங்களுக்கு தண்டனை விதிக்கும் 288 விதிகளை நீக்குவதற்கான வழியை ஏற்படுத்துகிறது. மசோதா அறிமுகமான போது, மக்களவையில் எதிர்க்கட்சிகள், பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து கோஷம் எழுப்பினர். எதிர்க்கட்சியின் எதிர்ப்பினிடையே, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மசோதாவை தாக்கல் செய்தார்.
மசோதா அறிமுகம் செய்யப்பட்டதும், அதை மக்களவையின் தேர்வுக் குழுவிற்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. இந்த மசோதா மோட்டார் வாகனச் சட்டம் 1988, புதுடெல்லி நகரசபை கவுன்சில் சட்டம் 1994, சாலை போக்குவரத்துக் கழக சட்டம் 1950 உள்ளிட்ட பல்வேறு சட்டங்களில் உள்ள விதிகளை நீக்க வழிவகுக்கும்.