ஜப்பான் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி அடுத்த வாரம் பயணம்
அடுத்த வாரம் நடைபெறும் இந்தியா–ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் பயணம் மேற்கொள்ள உள்ளார். அந்த நேரத்தில், அந்நாட்டு பிரதமர் ஷிகெரு இஷிபாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டின் போது, 2008-ல் இந்தியா மற்றும் ஜப்பான் இணைந்து வெளியிட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான கூட்டுப் பிரகடனம் திருத்தப்பட்டு, புதுப்பிக்கப்படும் வாய்ப்பும் உள்ளது. இப்புதுப்பிப்பு, சமகால முன்னுரிமைகள் மற்றும் தேவைகளை பிரதிபலிக்கும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் 68 பில்லியன் டாலர் (சுமார் ரூ.6 லட்சம் கோடி) முதலீடு செய்வதற்கான இலக்கை ஜப்பான் நிர்ணயித்துள்ளது. 10 டிரில்லியன் யென் மதிப்பிலான இந்த முதலீட்டு இலக்கு, இருநாடுகளுக்கிடையேயான பொருளாதார உறவை மேலும் வலுப்படுத்தும்.
இந்தியா–ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாடு, தனியார் நிறுவனங்களின் முதலீடுகளை ஊக்குவிக்கும் சிறந்த வாய்ப்பாக இருக்கும் என ஜப்பானிய செய்தி நிறுவனம் அசாஹி ஷிம்பன் தெரிவித்துள்ளது.