ஜம்மு காஷ்மீர் அரசு அலுவலகங்களில் பென் டிரைவுகள் மற்றும் பாதுகாப்பற்ற செயலிகள் பயன்படுத்த தடை
சைபர் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், ஜம்மு காஷ்மீரின் அரசு நிர்வாகத் துறைகள் மற்றும் மாவட்டங்களில் உள்ள துணை ஆணையர்களின் அலுவலகங்களில் பென் டிரைவுகள் மற்றும் பாதுகாப்பற்ற செயலிகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
தரவுகளின் ரகசியத்தை பாதுகாக்கவும், பாதுகாப்பு மீறல்களைத் தடுக்கும் நோக்கத்திலும் வாட்ஸ்அப் போன்ற செய்தி பகிர்வு தளங்கள் மற்றும் பாதுகாப்பற்ற ஆன்லைன் சேவைகளைப் பயன்படுத்தி ரகசிய தரவுகளை பகிர்வது அல்லது சேமிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது என அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் சைபர் பாதுகாப்பை மேம்படுத்தவும், முக்கிய அரசாங்கத் தகவல்களைப் பாதுகாக்கவும், தரவு மீறல் அபாயங்களை குறைக்கவும் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாக பொது நிர்வாகத் துறை ஆணையர் செயலாளர் எம்.ராஜு தெரிவித்தார்.
விதிவிலக்கான சந்தர்ப்பங்களில், அந்தந்த நிர்வாகத் தலைவர் மூலம் மாநில தகவல் அதிகாரி மற்றும் தேசிய தகவல் மையத்திற்கு அனுப்பப்படும் முறையான கோரிக்கைகளின் பேரில், ஒரு துறைக்கு 2–3 பென் டிரைவுகள் வரை அனுமதிப்பட்டியலில் சேர்க்க அனுமதிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த வழிமுறைகளை பின்பற்றாதது தீவிரமாகக் கருதப்படும்; இதனை மீறுவோர் மீது தொடர்புடைய விதிகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த உத்தரவுகள் உடனடியாக நடைமுறைக்கு வரும் என்றும் ஜம்மு காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளது.