உச்ச நீதிமன்றத்தில் இரு புதிய நீதிபதிகள் – கொலீஜியம் பரிந்துரை
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையில், நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், ஜே.கே. மகேஸ்வரி, பி.வி. நாகரத்னா ஆகியோர் இணைந்த கொலீஜியம் நேற்று பிற்பகல் கூட்டமாக சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இந்தக் கூட்டத்தில், நீதிபதி ஆலோக் ஆராதே மற்றும் நீதிபதி விபுல் எம். பஞ்சோலி ஆகிய இருவரையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய முடிவு செய்யப்பட்டது. மத்திய அரசு ஒப்புதல் அளித்தவுடன் குடியரசுத் தலைவர், இவர்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து உத்தரவு வெளியிடுவார்.
உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக விபுல் எம். பஞ்சோலி நியமிக்கப்பட்டால், 2031 மே மாதத்திலிருந்து 16 மாதங்கள் அவர் தலைமை நீதிபதியாகப் பொறுப்பு ஏற்க உள்ளார்.
1964-ஆம் ஆண்டு பிறந்த நீதிபதி ஆலோக் ஆராதே, 2009 டிசம்பரில் மத்யபிரதேச உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பணியாற்றினார்.
குஜராத் மாநிலத்தை சேர்ந்த விபுல் எம். பஞ்சோலி, ஏழு ஆண்டுகள் உதவி அரசு வழக்கறிஞராகவும், கூடுதல் அரசு வழக்கறிஞராகவும் பணியாற்றியவர். அவர் 2014 அக்டோபரில் குஜராத் உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டு, 2016 ஜூன் மாதத்தில் நிரந்தர நீதிபதியாக உயர்வு பெற்றார்.