“என் உயிர் இருக்கும் வரை மக்களின் வாக்குரிமையை பறிக்க யாரையும் அனுமதிக்க மாட்டேன்” – மம்தா பானர்ஜி உறுதி

மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, “நான் உயிருடன் இருக்கும் வரை மக்களின் வாக்குரிமையை யாரும் பறிக்க முடியாது” என்று வலியுறுத்தினார்.

கொல்கத்தாவின் மாயோ சாலையில் நடைபெற்ற திரிணமூல் மாணவர் பிரிவு திரிணமூல் சத்ரா பரிஷத் நிறுவனர் தின நிகழ்வில் அவர் உரையாற்றினார். அப்போது, “வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்கும் நோக்கில் பாஜக, மாநிலத்துக்கு வெளியே இருந்து 500-க்கும் மேற்பட்ட குழுக்களை அனுப்பியுள்ளது. அவர்கள் வீடு தோறும் சென்று தனிப்பட்ட தகவல்களை சேகரிக்க முயற்சிக்கின்றனர். இந்த தகவல்கள் உங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து அகற்ற பயன்படுத்தப்படலாம். எனவே யாரிடமும் தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டாம்; உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை நீங்களே சரிபார்க்க வேண்டும்.

ஏழைகளை வங்கதேசிகள் என்று பாஜக அவதூறு செய்கிறது. ஆனால் ஏழை மக்கள் தான் எனது மிகப் பெரிய பலம். நான் சாதி, மதத்தை நம்பவில்லை; மனிதநேயத்தை மட்டுமே நம்புகிறேன்.

தேர்தல் ஆணையம் எங்கள் அதிகாரிகளை அச்சுறுத்துகிறது. அதன் அதிகாரம் தேர்தல் காலத்திற்குள் மட்டுமே இருக்க வேண்டும்; ஆனால் மத்திய அரசு ‘சிறப்பு தீவிர திருத்தம் (SIR)’ என்ற பெயரில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை (NRC) நடத்த திட்டமிட்டுள்ளது. அதை எந்த நிலையிலும் நான் அனுமதிக்க மாட்டேன்.

மேற்கு வங்க மக்களை அவதூறு செய்வதற்காக திரைப்படங்கள் தயாரிக்கப்படுகிறது. சுதந்திரப் போராட்டத்தில் மேற்கு வங்க மக்கள் வகித்த பங்களிப்பை மறைக்க பாஜக விரும்புகிறது. இந்தியா முழுவதும் மேற்கு வங்க மக்களுக்கு எதிராக ‘மொழியியல் பயங்கரவாதம்’ உருவாக்கப்பட்டுள்ளது. இதை எங்களால் சகிக்க முடியாது.

மேலும், கேரள சிபிஎம் அரசு, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆங்கிலேயர்களுக்கு பயந்து நாடு விட்டு ஓடிவிட்டதாக கூறுவதை கண்டிக்கிறேன். அவர்கள் பாஜகவுடன் சேர்ந்து எங்களை எதிர்கொள்கின்றனர்,” என மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

Facebook Comments Box