“என் தாயை இழிவுபடுத்திய ஆர்.ஜே.டி – காங்கிரஸை நான் மன்னிக்கலாம்; ஆனால் பிஹார் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” – பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:
“ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் பிஹாரில் நடத்திய ஒரு பேரணியில், மறைந்த என் தாயார் குறித்து அவமதிப்பான வார்த்தைகள் பேசப்பட்டன. ஒரு அரசியல் மேடையில், எந்த தொடர்பும் இல்லாத என் தாயார் குறித்து பேசப்படுவது எவ்வளவு கேவலமானது என்பதை கற்பனை செய்தாலே வலிக்கிறது.
அம்மா என்பது எங்களின் உலகம், எங்களின் சுயமரியாதை. பாரம்பரியம் நிறைந்த பிஹாரில் என் தாயார் அவமதிக்கப்பட்டது என்பது, என் தாயை மட்டுமல்ல; நாட்டின் ஒவ்வொரு தாய்மார்களையும், சகோதரிகளையும், மகள்களையும் அவமதித்ததற்குச் சமம். அந்த நிகழ்வைக் கேட்ட ஒவ்வொரு பிஹார் தாய்மாரும் மனதளவில் புண்பட்டிருப்பார்கள் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை. எனது இதயத்தில் எழுந்த வலியைப் போலவே பிஹார் மக்களும் உணர்ந்திருக்கிறார்கள்.
அரசியலுடன் தொடர்பில்லாத என் தாயாரை ஆர்.ஜே.டி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஏன் குறிவைத்தன? ஏன் தாக்கின? பெண்களை இப்படி அவமதிப்பது, அவர்களை பலவீனமானவர்கள் எனக் கருதும் மனநிலையை வெளிப்படுத்துகிறது.
எனது தாயை இழிவுபடுத்திய ராஷ்டிரிய ஜனதா தளம் – காங்கிரஸை நான் தனிப்பட்ட முறையில் மன்னிக்கலாம்; ஆனால் பிஹார் மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்,” என்றார் பிரதமர்.
இதற்கிடையில், புதுடெல்லியில் இருந்தபடியே காணொலி காட்சி மூலம் பிஹார் மாநிலத்துக்கான ஜீவிகா வாழ்வாதார கடன் கூட்டுறவு சங்கத்தை பிரதமர் தொடங்கிவைத்தார். இதற்கான வங்கி கணக்கில் ரூ.105 கோடி பரிமாறிய அவர், இந்த நிதி குறைந்த வட்டியில் பெண்கள் தொழில்முனைவோர்களுக்கும், கிராமப்புற சிறு தொழில்களுக்கும் கடனுதவியாக வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.