“இப்படியே தொடர்ந்தால் காடுகள் அழிந்துவிடும்” – மரம் வெட்டுதலைக் கண்டித்து உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்படுவது தொடர்ந்து நடந்தால், எதிர்காலத்தில் காடுகள் முற்றிலும் மறைந்து விடும் என்று உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.

மலைப்பிரதேசங்களில் சுற்றுச்சூழல் சீரழிவு ஏற்படுவது தொடர்பான பொது நல வழக்கை விசாரித்தபோது, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதி வினோத் சந்திரன் அடங்கிய அமர்வு இந்தக் கருத்தை வெளியிட்டது.

சமீபத்தில் உத்தராகண்ட், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப் போன்ற வடமாநிலங்களில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்கள் நிகழ்ந்து, மக்கள் உயிரிழப்பும், சொத்துச் சேதமும் அதிக அளவில் ஏற்பட்டது. குறிப்பாக இமாச்சல் பிரதேச வெள்ளப் பாதிப்பு தொடர்பான ஊடகச் செய்திகளில், பெருமளவில் வெட்டப்பட்ட மரக்கட்டைகள் வெள்ளத்தில் மிதந்து வந்த காட்சிகள் வெளிப்பட்டன. அவை சட்டவிரோதமாக வெட்டப்பட்ட மரங்களே எனவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், உச்சநீதிமன்றம், “இப்போதே கட்டுப்படுத்தப்படாவிட்டால் இனி காடுகளே மீதமிருக்காது” என்று எச்சரித்தது. மேலும், சட்டவிரோத மரவெட்டலுக்கு தொடர்புடைய மத்திய அரசு, இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப் அரசுகள் ஆகியவை 2 வாரங்களுக்குள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

வழக்கு விசாரணையின்போது தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் கூறுகையில்:

“பஞ்சாப், உத்தராகண்ட், இமாச்சலப் பிரதேசங்களில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தால் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இமாச்சலில் வெள்ளத்தில் மிதந்த மரங்கள், அந்தப் பகுதிகளில் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்படுவதைத் தெளிவாக காட்டுகின்றன. இப்படியே நடந்தால் காடுகள் முற்றிலும் அழிந்துவிடும் அபாயம் உண்டு” என்றார்.

மேலும், நீதிபதிகள், “மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு, வெள்ளத்தில் எவ்வளவு பெரிய அளவில் வெட்டப்பட்ட மரங்கள் மிதந்தன என்பதற்கான காரணத்தை அறிய வேண்டும்” என்று உத்தரவிட்டனர். அதற்கு துஷார் மேத்தா, “சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலரை தொடர்பு கொண்டு முழுமையான தகவல் பெறப்படும்” என்று பதிலளித்தார்.

இந்த வழக்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு மீண்டும் விசாரணைக்கு வரும் என நீதிமன்றம் அறிவித்தது.

Facebook Comments Box