பஞ்சாபில் வெள்ள பாதிப்பு – 30 உயிரிழப்பு : கல்வி நிறுவனங்கள் செப்டம்பர் 7 வரை மூட உத்தரவு
பஞ்சாப் மாநிலம் கடும் வெள்ளக்கொல்லை சந்தித்து வருகிறது. வெள்ளத்தால் ஏற்பட்ட ஆபத்துகளை முன்னிட்டு, அங்குள்ள கல்வி நிறுவனங்களுக்கு செப்டம்பர் 7 வரை விடுமுறை அளிக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.
கல்வித் துறை அமைச்சர் ஹர்ஜோத் சிங் பெய்ன்ஸ் வெளியிட்ட அறிவிப்பில்,
“மாநிலத்தின் தற்போதைய வெள்ள நிலைமையை கருத்தில் கொண்டு, முதல்வர் பகவந்த் சிங் மான் உத்தரவின்படி, பஞ்சாப் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகள் அனைத்தும் செப்டம்பர் 7 வரை மூடப்படும். உள்ளூர் நிர்வாகம் வழங்கும் வழிகாட்டுதல்களை மக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
இயற்கையின் சீற்றத்தால் பஞ்சாப் மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளதுடன், 3.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே செப்டம்பர் 3 வரை விடுமுறை அறிவித்திருந்த நிலையில், வெள்ளநிலை மேலும் மோசமடைந்ததால், கல்வி நிறுவனங்கள் மூடப்படும் காலக்கெடு கூடுதலாக 4 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இமாச்சல பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் பெய்த கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகளில் பாறைகள் இடிந்து விழுந்ததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மேகவெடிப்பு காரணமாக குறுகிய நேரத்தில் அதிக மழை பெய்ததால் சட்லஜ், பியாஸ், ராவி ஆறுகள் மற்றும் பருவகால ஓடைகள் பெருக்கெடுத்து ஓடுகின்றன.
இதன் விளைவாக பஞ்சாப் மாநிலம் கடுமையான வெள்ளத்தை எதிர்கொண்டு வருகிறது. மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை நிலையை இன்னும் மோசமாக்கியுள்ளது.