குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் வாக்கு விலகல் – “நம்பிக்கை மோசடி, விசாரணை அவசியம்” : மணீஷ் திவாரி
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில், சில எம்.பி.க்கள் எதிர்பார்த்த அணியிலிருந்து விலகி வாக்களித்ததாக சர்ச்சை கிளம்பியுள்ளது.
இந்த விவகாரத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா சுலே தெரிவித்ததாவது:
“குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் ரகசிய வாக்கெடுப்பு முறையில் நடைபெறுகிறது. அப்படியிருக்க, யார் யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை எப்படி தெரிந்து கொள்ள முடியும்? எந்தக் கட்சியின் ஓட்டுகள் பிரிந்தன என்பதை எனக்கு தெரியாது. இதற்கு மகாராஷ்டிரா பொறுப்பேற்க முடியாது” என்றார்.
சிவசேனா (உத்தவ் அணி) எம்.பி அர்விந்த் சாவந்த் கூறுகையில்:
“செல்லாத ஓட்டு போட்ட எம்.பி.க்கள் கல்வியறிவு இல்லாதவர்களா? அல்லது திட்டமிட்டே அப்படி செய்தார்களா? அவர்கள் மனசாட்சிப்படி வாக்களித்தார்களா, இல்லை வாங்கப்பட்டார்களா? உண்மையில் அவர்கள் வேண்டுமென்றே தவறான வாக்குகளை பதிவு செய்துள்ளனர். எல்லா முகமைகளும் பாஜக கட்டுப்பாட்டில் உள்ளன” என விமர்சித்தார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் திவாரி கூறுகையில்:
“இந்தத் தேர்தலில் எம்.பி.க்கள் சிலர் அணி மாறி வாக்களித்திருந்தால், அதைப் பற்றி இண்டியா கூட்டணி கட்சிகள் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். இப்படி அணியை விட்டு வாக்களிப்பது மிகப் பெரிய நம்பிக்கை மீறல். இது கூட்டணிக்குள் ஒற்றுமை குறித்த கேள்விகளை எழுப்புகிறது” என்றார்.
இதற்கிடையில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.