நேபாள கலவரத்தில் சிக்கிய ஆந்திர சுற்றுலாப் பயணிகள் 144 பேர் தாயகம் திரும்பினர்
நேபாளத்தில் நடைபெற்ற உள்நாட்டு கலவரத்தில் சிக்கித் தவித்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 144 சுற்றுலா பயணிகள், பாதுகாப்பாக விமானம் மூலம் தாயகமான ஆந்திராவிற்கு திரும்பினர். அவர்களை விமான நிலையத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
நேபாளத்தில் ஏற்பட்ட கலவரத்தில் சிக்கித் தவித்த ஆந்திர சுற்றுலாப் பயணிகள், தங்களைக் காப்பாற்றும்படி வாட்ஸ்அப் வீடியோவின் மூலம் மாநில கல்வி துறை அமைச்சர் லோகேஷிடம் உதவி கோரினர். இதையடுத்து, அவர் அமராவதி தலைமைச் செயலகத்தில் தங்கி, விசேஷ அதிகாரிகள் குழுவை அமைத்து, தேவையான தகவல்களை சேகரித்தார்.
மேலும் மத்திய வெளியுறவு துறை அமைச்சகத்தினரிடமும், சில மத்திய அமைச்சர்களிடமும் உதவியை நாடினார். சுமார் 240 பேரை மீட்கும் நடவடிக்கைகளைத் தொடங்கிய அவர், தொடர்ந்து இரண்டாம் நாளும் தலைமைச் செயலகத்தில் முகாமிட்டு செயல்பட்டார். பின்னர், டெல்லியில் இருந்து தனிப்பட்ட விமானம் நேபாள தலைநகர் காத்மாண்டுவுக்கு அனுப்பப்பட்டது. அங்கு இருந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 144 பேரை அழைத்து வந்து, விசாகப்பட்டினத்தில் இறக்கினார்கள்.
விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் நேற்று இரவு 104 பேரும், திருப்பதி விமான நிலையத்தில் மீதமுள்ள 40 பேரும் பாதுகாப்பாக வந்து சேர்ந்தனர். அவர்களை கண்ட உறவினர்கள், நண்பர்கள் ஆனந்தக் கண்ணீருடன் மகிழ்ச்சியாக வரவேற்றனர்.