இந்திய ராணுவத்தை வழிநடத்தும் வாய்ப்பு கிடைத்தது பெருமைக்குரிய தருணம் என்று ராணுவ தளபதி உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் புதிய ராணுவ தளபதியாக உபேந்திர திவேதி தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் நடைபெற்ற விழாவில் புதிய தளபதியாக பதவியேற்றார்.
இதையடுத்து அங்கு நடைபெற்ற ராணுவ அணிவகுப்பையும் ஏற்றுக்கொண்டார். புதிய ராணுவ தளபதியாக பதவியேற்ற உபேந்திர திவேதி தனது சகோதரரின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.
இதைத் தொடர்ந்து ராணுவ தளபதி உபேந்திர திவேதி தேசிய போர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்திய ராணுவத்திற்கு தலைமை தாங்கும் வாய்ப்பு கிடைத்தது மிகவும் பெருமையான தருணம் என்று குறிப்பிட்டார்.
இந்திய ராணுவம் தியாகம் மற்றும் பங்களிப்புகளை அடிப்படையாகக் கொண்டது என்று கூறிய அவர், போரில் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன் என்றார்.
நமது ராணுவ வீரர்களுக்கு நவீன ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை தொடர்ந்து வழங்குவது மிகவும் முக்கியம் என்று குறிப்பிட்ட ராணுவ தளபதி, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உபகரணங்களை ராணுவம் வாங்கும் என்றார்.
Discussion about this post