114 ரஃபேல் விமானங்களை வாங்கும் திட்டத்தை இந்தியா ஆராய்ச்சி செய்கிறது
பாகிஸ்தானுக்கு எதிரான ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலின்போது, பிரான்ஸிலிருந்து வாங்கிய ரஃபேல் போர் விமானங்கள் இந்திய விமானப்படையால் பயன்படுத்தப்பட்டன. அப்போது அவை சிறப்பான செயல்திறன் வெளிப்படுத்தின.
அதில் உள்ள ஸ்பெக்ட்ரா எலக்ட்ரானிக் பாதுகாப்பு அமைப்பு, பாகிஸ்தான் போர் விமானங்கள் செலுத்திய, சீனாவில் தயாரிக்கப்பட்ட பிஎல்-15 ஏவுகணைகளை திசைதிருப்பியது. இதனால் ரஃபேல் மீண்டும் வாங்க வேண்டுமென இந்திய விமானப்படை விருப்பம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 114 ரஃபேல் போர் விமானங்களை ரூ.2 லட்சம் கோடி மதிப்பில், பிரான்ஸ் டஸ்ஸோ ஏவியேஷன் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் தயாரிக்கலாம் என முன்மொழியப்பட்டுள்ளது. இதற்கான முடிவை பாதுகாப்புத் துறை செயலாளர் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் குழு ஆராய இருக்கிறது.
ஏற்கனவே இந்திய விமானப்படையில் 36 ரஃபேல் போர் விமானங்கள் உள்ளன. மேலும், இந்திய கடற்படையின் விமானம் தாங்கி போர்க்கப்பல்களில் பயன்படுத்துவதற்காக 36 ரஃபேல்-எம் வகை விமானங்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. புதிய 114 விமானங்களும் வாங்கப்பட்டால், மொத்த ரஃபேல் எண்ணிக்கை 176 ஆக உயரும்.
மேலும், ரஃபேல் விமானங்களின் எம்-88 இன்ஜின்களை பழுது பார்க்கவும் பராமரிக்கவும் ஹைதராபாத்தில் மையம் அமைக்கும் திட்டத்தை டஸ்ஸோ ஏவியேஷன் நிறுவனம் வகுத்துள்ளது. இந்தியாவில் ரஃபேல் தயாரிப்பு ஒப்புதல் பெற்றால், டாடா குழுமம் மற்றும் டஸ்ஸோ இணைந்து உற்பத்தி செய்யும்; அதில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட பாகங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும்.