மகாராஷ்டிராவில் என்கவுண்டர்: 2 பெண் நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை

மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில் இன்று அதிகாலை பாதுகாப்புப் படையினருடன் மோதல் ஏற்பட்டது. இதில் இரண்டு பெண் நக்சலைட்டுகள் உயிரிழந்தனர்.

எட்டப்பள்ளி தாலுகாவின் கட்டா ஜம்பியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மொடஸ்கே கிராமம் அருகிலுள்ள காட்டில், நக்சலைட் குழுவினர் முகாமிட்டிருந்ததாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, அஹேரி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சத்ய சாய் கார்த்திக் தலைமையில், அஹேரி பிராந்தியத்தைச் சேர்ந்த ஐந்து சி-60 கமாண்டோ குழுக்கள், கட்டா ஜம்பியா காவல் நிலைய போலீசார் மற்றும் சிஆர்பிஎஃப் 191-ம் பட்டாலியனின் வீரர்கள் இணைந்து தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்தனர்.

அப்பகுதி முற்றுகையிடப்பட்டதும், நக்சலைட்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதற்கு சி-60 கமாண்டோக்கள் பதிலடி தந்தனர். மோதலின் பின்னர், இரண்டு பெண் நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அங்கிருந்து ஒரு ஏகே-47 துப்பாக்கி, ஒரு மேம்பட்ட கைத்துப்பாக்கி, வெடிமருந்துகள் மற்றும் பல நக்சல் சார்ந்த புத்தகங்களும் மீட்கப்பட்டன.

இன்னும் நக்சலைட்டுகள் அப்பகுதியில் ஒளிந்திருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்த, தொடர்ந்து தீவிர சோதனை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

Facebook Comments Box