வர்த்தக பேச்சுவார்த்தையை தொடர இன்று அமெரிக்கா செல்கிறார் அமைச்சர் பியூஷ் கோயல்

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்குதாரராக அமெரிக்கா உள்ளது. 2024-25 ஆண்டில் இருதரப்பு வர்த்தகம் 131.84 பில்லியன் அமெரிக்க டாலராக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்றுமதி 86.5 பில்லியன் டாலர். இந்நிலையில், இந்தியா மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 25 சதவீத வரி விதித்தார், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக 25 சதவீத அபராத வரியும் விதிக்கப்பட்டது.

இரு நாடுகள் இடையே கடந்த பிப்ரவரி மாதம் முதல் இருதரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் குழுவினர் பிரண்டன் லின்ச் தலைமையில் இந்தியா வந்து கடந்த 16-ம் தேதி, வர்த்தக துறை சிறப்பு செயலாளர் ராஜேஷ் அகர்வால் தலைமையிலான இந்திய குழுவினருடன் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தை சரியான திசையில் செல்வதாக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். இரு நாடுகளும் பரஸ்பரம் பயன் அடையும் வகையில் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் செய்ய சம்மதித்தன. இதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், அமெரிக்கா உடன் வர்த்தக பேச்சுவார்த்தையை தொடர, வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல் தனது குழுவினருடன் இன்று அமெரிக்கா செல்கிறார். இதில் ராஜேஷ் அகர்வால் உட்பட மற்ற அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இவர்கள் அமெரிக்க குழுவினருடன் நியூயார்க்கில் பேச்சுவார்த்தை நடத்துவர்.

Facebook Comments Box