போலி என்கவுன்ட்டர் குற்றச்சாட்டு: மாவோயிஸ்ட் கமாண்டர் உடலை பாதுகாக்க உச்ச நீதிமன்ற உத்தரவு

சத்தீஸ்கரில் போலி என்கவுன்ட்டர் நடந்ததாக புகார் அளிக்கப்பட்டதால், மாவோயிஸ்ட் கமாண்டர் கதா ராமசந்திர ரெட்டியின் உடலை எரியாமல் பாதுகாக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாராயண்பூர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் செப்டம்பர் 22-ஆம் தேதி நடத்திய மோதலில் 2 மாவோயிஸ்ட்கள் உயிரிழந்தனர். அதில் ஒருவர் கதா ராமசந்திர ரெட்டி. ஆனால், அவர் போலி என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டதாக அவரது மகன் ராஜ சந்திரா குற்றம்சாட்டினார். இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். பண்டிகை விடுமுறை காரணமாக அவசரமாக விசாரணை நடைபெறாததால், உச்ச நீதிமன்றத்தில் அவர் மனு செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் திபாங்கர் தத்தா மற்றும் ஏ.ஜி. மாசிஹ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “ரெட்டியின் உடல் மருத்துவமனையில் உள்ளது. பிரேத பரிசோதனை வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளதால் போலீசாருக்கு எதிராக குற்றச்சாட்டு சாட்ட முடியாது” என்று தெரிவித்தார்.

இதையடுத்து, சத்தீஸ்கர் நீதிமன்றம் தீர்மானம் எடுக்கும் வரை, கதா ராமசந்திர ரெட்டியின் உடலை எரிக்காமல் பாதுகாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

Facebook Comments Box