ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மனித உரிமை மீறல்களுக்கு பாகிஸ்தான் பொறுப்பேற்க வேண்டும்: இந்தியா
ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரில் போராட்டக்காரர்களுக்கு எதிராக நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு பாகிஸ்தான் அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், காஷ்மீர் அகதிகளுக்காக ஒதுக்கப்பட்ட 12 சட்டமன்றத் தொகுதிகளை ரத்து செய்யவேண்டும், வரிச் சலுகைகள், உணவு, மின்சார மானியங்கள் வழங்கப்படவேண்டும், மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை நிறைவு செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட 38 கோரிக்கைகளை முன்வைத்து, செப்டம்பர் 29 முதல் ஜம்மு-காஷ்மீர் கூட்டு அவாமி நடவடிக்கைக் குழு தலைமையில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
நேற்றைய போராட்டத்தின் போது பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு, கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் வன்முறைகளை பயன்படுத்தி போராட்டக்காரர்களை தாக்கினர். இதில் 12 பேர் கொல்லப்பட்டனர், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். டாடியால், முசாபராபாத், ராவலகோட், நீலம் பள்ளத்தாக்கு மற்றும் கோட்லி பகுதிகளில் இந்த போராட்டங்கள் பரவி உள்ளன.
போராட்டங்கள் தொடங்கியபோது சந்தைகள், கடைகள் மற்றும் உள்ளூர் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மொபைல், இணையம் மற்றும் லேண்ட்லைன் சேவைகள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையில், ஐக்கிய காஷ்மீர் மக்கள் தேசியக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நசீர் அஜீஸ் கான், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச சமூகத்துக்கு அவசர நடவடிக்கைக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இந்த பின்னணியில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:
“பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீரின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெறுவதை நாங்கள் அறிந்துள்ளோம். இந்த போராட்டங்களில் அப்பாவி பொதுமக்களுக்கு எதிராக பாகிஸ்தான் படைகள் கடுமையான தாக்குதல்கள் நடத்துகின்றன.
இது பாகிஸ்தானின் இயல்பான அடைக்குமுறை நடைமுறை மற்றும் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வளங்களை கத்தியடிப்பதால் ஏற்பட்ட இயல்பான எதிர்ப்புணர்வாகும். பாகிஸ்தான் தனது கொடூரமான மனித உரிமை மீறல்களுக்கு முழுமையாக பொறுப்பேற்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.