ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தான் ராணுவம் எவ்வாறு இழந்தது? – இந்திய விமானப் படையின் பட்டியல்
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின் போது, 4–5 போர் விமானங்கள், ரேடார்கள், கட்டுப்பாட்டு மையங்கள், ஓடுபாதைகள் மற்றும் ஹேங்கர்கள் உள்ளிட்ட பலவற்றை பாகிஸ்தான் இழந்ததாக இந்திய விமானப் படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங் தெரிவித்தார்.
இந்திய விமானப் படை தினம் வரும் 8-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய விமானப் படையின் தொலைநோக்குத் திட்டங்கள் மற்றும் ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்தார். அவர் கூறியது:
“விமானப்படை தனது போர் திறன்களை மேம்படுத்த 2047-க்கான செயல்திட்ட வரைபடத்தை உருவாக்கியுள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் வெற்றி என்பது முப்படைகளின் இணைந்த முயற்சியால் கிடைத்த வெற்றி. அப்போது பாகிஸ்தான் ராணுவம் பெரிய இழப்புகளை சந்தித்தது. குறிப்பாக, 4–5 போர் விமானங்கள், வான்வழி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகள், ரேடார்கள், ஓடுபாதைகள், ஹேங்கர்கள் உள்ளிட்ட வளங்கள் நாங்கள் பாகிஸ்தானுக்கு சேதப்படுத்தினோம்.
இந்தியா தெளிவான நோக்கத்துடன் ஆபரேஷன் சிந்தூரைத் தொடங்கியது. குறிக்கோளை அடைந்த உடனே மோதலை விரைவாக முடித்தது. இது உலகத்திற்கு ஒரு பாடமாகும். இந்தியாவின் ராணுவ மற்றும் சிவிலியன் கட்டமைப்புகளை பாதுகாப்பதும், எதிரியின் அச்சுறுத்தலுக்கு தீர்க்கமான பதிலடி கொடுப்பதும் முக்கியம்.
பிரதமர் மோடி ஆகஸ்ட் 15 அன்று உள்நாட்டு வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கும் திட்டத்தை அறிவித்தார். அதன்படி, சுதர்சன சக்கரா எனப்படும் இந்திய வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கும் பணியில் முப்படைகள் இணைந்து செயல்பட தொடங்கியுள்ளன. ஆபரேஷன் சிந்தூரில் ரஷ்யாவின் எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு இந்திய கட்டமைப்புகளை பாதுகாத்திருந்தது. தற்போது சுதர்சன சக்கரா உள்நாட்டிலேயே உருவாக்கப்படுகிறது” என்று அவர் தெரிவித்தார்.
கூடுதல் கேள்விக்கு – எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்புகளை மேலும் வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளதா என்று – ஏ.பி. சிங் நேரடி பதில் அளிக்காமல், அந்த அமைப்பு மிகவும் நன்றாக செயல்படுகிறது எனத் தெரிவித்தார்.