குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அக்டோபர் 22-ம் தேதி சபரிமலை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ஐயப்பனை தரிசிப்பதற்காக வரும் அக்டோபர் 22-ம் தேதி சபரிமலை வருவார். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் முழு தீவிரத்தோடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு மலையாள மாதத்திலும் 5 நாள் தொடர் வழிபாடுகள் நடைபெறும் வழக்கம் உள்ளது. அக்.18-ம் தேதி துலாம் மாத பிறப்பை முன்னிட்டு அக்.17-ம் தேதி மாலை நடை திறக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொண்டு ஐயப்பனை தரிசிப்பார்.

திரவுபதி முர்மு ஏற்கனவே மே மாதம் சபரிமலை வர உள்ளதாக இருந்தார். அதற்காக பம்பை, சன்னிதானம் பகுதிகள் ராணுவ கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. ஆனால் அப்போது நடைபெற்ற இந்தியா–பாகிஸ்தான் போர்ச் சூழலால் அவர் வர முடியவில்லை. இந்நிலையில், இம்மாதம் அவர் வர உள்ளதாக தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேவசம்போர்டு அமைச்சர் வி.என். வாசன் கூறியதாவது:

“குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அக்டோபர் 22-ம் தேதி கொச்சி விமான நிலையம் மூலம் வந்து, ஹெலிகாப்டர் மூலம் நிலக்கலுக்கு செல்லுவர். பின்னர் கார் மூலம் பம்பை வந்து, நீலி மலை பாதை வழியே நடந்து செல்ல உள்ளார். மாற்று ஏற்பாடாக வாகனத்தில் நேரடியாக சன்னிதானம் செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.”

பாதுகாப்பு காரணமாக, குடியரசுத் தலைவர் வருகை தொடர்பான முழு விவரங்கள் தேவசம்போர்டுக்கு வழங்கப்படவில்லை. வருகை நாளில், பாதுகாப்பு காரணங்களால் பக்தர்களின் வருகை கட்டுப்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் அக்.17-ம் தேதி மட்டும் பக்தர்களுக்காக தரிசன அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்தடுத்த நாட்களில் தரிசன முன்பதிவுகளில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Facebook Comments Box