பிரம்மபுத்திரா நதியின் கீழ் சுரங்கப்பாதை 32 மீட்டர் ஆழத்தில் அமைகிறது
அசாம் மாநிலத்தில் நாட்டில் முதன்முறையாக பிரம்மபுத்திரா நதியின் கீழ் சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ரூ.6,000 கோடி மதிப்புள்ள இத்திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை விரைவில் ஒப்புதல் அளிக்க வாய்ப்பு உள்ளது.
நுமலிகர் இடத்திலிருந்து கோஹ்பூர் வரை அமைக்கப்படவுள்ள இத்திட்டம் நாட்டின் முதல் ஆறு கீழ் சுரங்கப்பாதை திட்டமாகும். சீன எல்லைக்கு அருகில் அருணாச்சலப் பிரதேசத்தை ஒட்டி அமைக்கப்படும் இந்த சுரங்கப்பாதை 33.7 கி.மீ நீளத்தும், 32 மீட்டர் ஆழத்தும் கொண்டதாக இருக்கும். திட்டம் முழுமையாக நிறைவேற 5 ஆண்டுகள் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் அறிக்கைக்குப் பிறகு பிரதமர் தலைமையிலான குழு இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கும். ஒப்புதல் கிடைக்கப்பட்டவுடன் பிரம்மபுத்திரா நதிக்கு கீழ் சுரங்கப்பாதை அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும். தேசிய நெடுஞ்சாலை மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் (NHAI) இந்த சுரங்கப்பாதையை கட்டும் பொறுப்பில் இருக்கும். வனவிலங்கு வாழ்வு நிலைக்குழுவுக்கான தேசிய வாரியம் இதற்கான சம்மதத்தை வழங்கியுள்ளது. மேலும், மண்ணின் நிலைத்தன்மை, நிலத்தடி நீர் ஓட்டம் மற்றும் படிம அமைப்பு முறை போன்றவற்றில் ஏற்படும் பாதிப்புகளை அறிவியல் அடிப்படையில் மதிப்பீடு செய்ய திட்டம் கேட்டுள்ளது.
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தொழில்நுட்ப குழுவின் ஆய்வுக்குப்பின் அறிக்கையை தயார் செய்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக பிரம்மபுத்திரா நதியின் கீழ் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது.
அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, ‘‘ஆற்றுக்கு மேல் பல பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. ஆற்றுக்கு கீழ் நாங்கள் ஏன் சுரங்கப்பாதை அமைக்கக் கூடாது என எனக்கு எண்ணம் வந்தது. ஜம்மு காஷ்மீரில் மலைக்கீழ் அடல் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் பிரம்மபுத்திரா நதிக்கு கீழே சுரங்கப்பாதை அமைக்க முடியும் என்று நான் எண்ணினேன். தற்போது அதற்கான திட்ட அறிக்கை தயார்’’ என தெரிவித்துள்ளார்.