“நானும் அதிர்ச்சி அடைந்தேன்…” – காலணி தாக்குதல் முயற்சி சம்பவம் குறித்து தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்

உச்ச நீதிமன்ற வளாகத்தில், தனது மீது நிகழ்ந்த காலணி தாக்குதல் முயற்சியைப் பார்த்ததும், தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மிகவும் அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்தார்.

நீதிமன்ற அறையில் நடந்த விவாதத்தின் போது பி.ஆர்.கவாய் கூறியதாவது: “திங்கள்கிழமை நிகழ்ந்த சம்பவத்தால் நானும், எனது சகோதரர் நீதிபதியும் மிகவும் அதிர்ச்சி அடைந்தோம். எங்களுக்கு இது மறக்க வேண்டிய ஒரு விஷயம்” என அவர் குறிப்பிட்டார். அதே சமயத்தில் அருகில் இருந்த நீதிபதி உஜ்ஜல் பூயான், “இந்த விவகாரம் எனக்கு சொந்த கருத்தை உருவாக்கியது. அவர் இந்தியாவின் தலைமை நீதிபதி. இது நகைச்சுவைக்கான சம்பவமல்ல; இது உச்ச நீதிமன்ற அமைப்புக்கு ஏற்பட்ட அவமானம்” என தெரிவித்தார்.

நீதிமன்ற அறையில் இருந்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “இந்தச் சம்பவம் மன்னிக்க முடியாதது. ஆனால் தலைமை நீதிபதி மிகுந்த பெருந்தன்மையுடன் இதை முடித்துவைத்தது பாராட்டத்தக்கது” என்று கூறினார்.

சம்பவம் என்ன? – கடந்த திங்கள்கிழமை, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான வழக்கு விசாரணைக்காக அமர்வு நடைபெற்றது. அப்போது வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் தனது காலணியை கழற்றி தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயை நோக்கி வீசியுள்ளார். இதனால் அவரை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது; விசாரணைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார். பின்னர் பார் கவுன்சில் அவரை சஸ்பெண்ட் செய்தது.

சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது மற்றும் விசாரணை தடைபட்டது. அதேநேரத்தில், “சனாதன தர்மத்தை அவமதிக்க முடியாது” எனக் கிஷோர் கோஷமிட்டதாகக் கூறப்படுகிறது. தலைமை நீதிபதி கவாய், “இதனால் கவனத்தை சிதற விடாதீர்கள். இது என்னை பாதிக்கவில்லை” என தெரிவித்தார்.

இதற்கு முன்பு, ராகேஷ் தலால் என்பவர் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். மனுவில், மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஜவாரி கோயிலில் சேதமடைந்த விஷ்ணு சிலையை மறுநிர்மாணம் செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார். அந்த மனு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் கடந்த மாதம் விசாரணைக்கு வந்த போது, தலைமை நீதிபதி “சிலை மறுநிர்மாணம் தொடர்பாக அந்த தெய்வத்திடமே கேளுங்கள்” என கூறி மனுவை தள்ளுபடி செய்தார். இதனால் உந்தப்பட்ட 71 வயது வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் காலணி வீச முயன்றார்.

இந்தச் சம்பவத்திற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைதளத்தில், “தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயுடன் தொலைபேசியில் பேசினேன். அவர் மீது நடந்த தாக்குதல் இந்தியர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இது கண்டிக்கத்தக்கது” என குறிப்பிட்டுள்ளார்.

Facebook Comments Box