உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இந்தியாவும் ஆஸ்திரியாவும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
பிரதமர் மோடியும், அந்நாட்டு அதிபர் கரேல் நெஹ்மரும் கூட்டாக ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, ஏற்கனவே கூறியது போல் இது போருக்கான நேரம் அல்ல என்றும், போராட்ட களத்தில் நின்று பிரச்சனையை தீர்க்க முடியாது என்றும் கூறினார்.
தனது ஆஸ்திரியா பயணம் வரலாற்று சிறப்பு மிக்கது என்று கூறிய பிரதமர் மோடி, இந்தியாவும் ஆஸ்திரியாவும் உள்கட்டமைப்பு மேம்பாடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ஹைட்ரஜன், நீர் மற்றும் கழிவு மேலாண்மை, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு தளங்களில் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளதாக கூறினார்.
பின்னர் பேசிய ஆஸ்திரிய அதிபர் கரேல் நெஹ்மர், இரு நாடுகளுக்கும் இடையே ஆண்டுக்கு 2.7 பில்லியன் யூரோ வர்த்தகம் நடைபெறுவதாகவும், வரும் நாட்களில் இந்த மதிப்பு அதிகரிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.