உலக சாம்பியன்ஸ் ஆஃப் லெஜெண்ட்ஸ் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடும் வேர்ல்ட் சாம்பியன்ஸ் ஆஃப் லெஜண்ட்ஸ் 2024 டி20 கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. இந்தத் தொடரின் இறுதிப் போட்டி நேற்று இரவு பர்மிங்காமில் நடைபெற்றது.
இப்போட்டியில் யுவராஜ் சிங் தலைமையிலான இந்திய சாம்பியனும், யூனிஸ் கான் தலைமையிலான பாகிஸ்தான் சாம்பியனும் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக சோயப் மாலிக் 41 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் அனுரீத் சிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதன்பின், 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி, 19.1 ஓவரில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 159 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் சாம்பியன் பட்டம் வென்றது. இந்தியா சார்பில் அம்பதி ராயுடு 50 ரன்களும், யூசுப் பதான் 30 ரன்களும் எடுத்தனர்.