வயநாடு நிலச்சரிவில் வீடு மற்றும் உடமைகளை இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்… முதல்வர் பினராயி விஜயன்

0

வயநாடு நிலச்சரிவில் வீடு மற்றும் உடமைகளை இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 3வது நாளாக போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், வயநாடு நிலவரம் குறித்து விவாதிக்க கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. வயநாட்டில் உள்ள அப்துல்கலாம் நினைவு மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர், தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் பேசினார்.

மீட்புப் பணியில் ராணுவத்தின் முயற்சியை பாராட்டுகிறேன் என்றார். நிலத்தடியில் சிக்கியவர்களை மீட்பதற்கு இயந்திரங்களை கொண்டு வருவது கடினம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெய்லி பாலத்தின் கட்டுமானப் பணிகள் பெருமளவு நிறைவடைந்துள்ளதாகக் குறிப்பிட்ட பினராயி விஜயன், காணாமல் போனவர்களைத் தேடும் பணி ஆற்றில் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

அனர்த்தத்தில் இருந்து மீட்கப்பட்டவர்கள் தற்காலிகமாக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், முன்னைய சூழ்நிலைகளில் மேற்கொள்ளப்பட்டது போன்று புனர்வாழ்வு பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உயிர் பிழைத்தவர்களுக்கு உளவியல் ரீதியான ஆதரவை வழங்குவது மிகவும் அவசியம் என்றும், நோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here