பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
வங்கதேசத்தில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து மாணவர்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தினர். அதே நேரத்தில், ஷேக் ஹசீனா தியாகிகளின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு வழங்குவதில் உறுதியாக இருந்ததால், அவரை ராஜினாமா செய்யக் கோரி மாணவர்கள் நாடு முழுவதும் வீதிகளில் இறங்கினர். வன்முறையில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
நிலைமை தீவிரமடைந்ததால், ஷேக் ஹசீனாவை பதவி விலகுமாறு ராணுவம் கோரியது. மேலும், பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு, ராணுவ ஹெலிகாப்டரில் தனது சகோதரி ஷேக் ரெஹானாவுடன் நாட்டை விட்டு வெளியேறியதை அடுத்து, ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அவர்கள் திரிபுராவின் அகர்தலாவில் தரையிறங்கியதாகவும், ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறியதை அறிந்ததும், போராட்டக்காரர்கள் டாக்காவில் வங்காளதேசத்தை உருவாக்க காரணமாக இருந்த அவரது தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானின் சிலையை சேதப்படுத்தினர்.
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ததை அடுத்து, ராணுவம் பொறுப்பேற்றது.
நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ராணுவ தளபதி வக்கார்-உஸ்-ஜமான், பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா ராஜினாமா செய்துள்ளதால், ராணுவம் தலைமையிலான இடைக்கால அரசு வங்கதேசத்தை வழிநடத்தும் என்றார்.
மேலும், போராட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து ராணுவம் விசாரணை நடத்தும் என்றும், மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வீடு திரும்புமாறும் கேட்டுக்கொண்டார்.
வங்கதேசத்தில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதையடுத்து, மேற்கு வங்காள-வங்கதேச எல்லையில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். குறிப்பாக எல்லைப் பாதுகாப்புப் படையின் இயக்குநர் ஜெனரல் கொல்கத்தாவில் முகாமிட்டுள்ளார்.