சிறுமியை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தை சேர்ந்த 13 வயது சிறுமி நேற்று காலை தனது வீட்டின் அருகே உள்ள கடைக்கு உணவு பொருட்கள் வாங்க சென்றார். அப்போது அங்கு வந்த நீரஜ் என்ற நபர் சிறுமிக்கு தண்ணீர் பாட்டிலை கொடுத்துள்ளார்.
பாட்டிலில் இருந்த தண்ணீரை குடித்த சில நிமிடங்களில் சிறுமி மயங்கி விழுந்தார். அப்போது நீரஜின் நண்பர் ஷைலேந்திரா மற்றும் மற்றொரு நபர் சேர்ந்து மயங்கி கிடந்த சிறுமியை காரில் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
பின்னர், பர்சானா பகுதி அருகே சிறுமியை சாலையோரம் வீசிவிட்டு 3 பேரும் தப்பிச் சென்றனர். கண்விழித்து வீடு திரும்பிய சிறுமி நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறியுள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் உடனடியாக போலீசில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான 3 பேரை தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், சிறுமியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட பிறகு அவரிடம் விரிவான வாக்குமூலம் பெறப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.