புனேவில் கனமழை காரணமாக பிரதமரின் பயணம் ரத்து செய்யப்பட்டது.
மும்பை புனே சிவாஜிநகர் மாவட்ட நீதிமன்றம்-ஸ்வர்கேட் சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் பாதையை பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை திறந்து வைப்பதற்கும், ரூ.22,600 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்கும் திட்டமிட்டிருந்தார். மேலும் பிரதமரின் வருகைக்காக புனேவில் எஸ்.பி. கல்லூரி மைதானத்தில் கூட்டம் நடத்தப்பட்டது. இதனிடையே புனேவில் பெய்த கனமழையால் பயணம் ரத்து செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, தேசியவாத காங்கிரஸ் (எஸ்பி) கட்சித் தலைவர் சுப்ரியா சுலே, இந்த வழித்தடத்தை காணொலி மூலம் திறந்து வைக்குமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார். அதுமட்டுமின்றி, மெட்ரோ ரயில் பாதையை உடனடியாக திறக்கக் கோரி, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (எஸ்பி) மற்றும் உத்தவ் பாலாசாகேப் தாக்கரேவின் மகாவிகாஸ் அகாதி கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த சிவசேனா கட்சியினர், சிவாஜிநகர் மாவட்ட நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்நிலையில், மத்திய அமைச்சர் முரளிதர் மொகுல் எக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், புனே மெட்ரோவின் சிவாஜிநகர் மாவட்ட நீதிமன்றம்-ஸ்வர்கேட் வழித்தடத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் 29ம் தேதி (நாளை) திறந்து வைக்கிறார். மேலும், ஸ்வர்கேட்-கட்ராஜ் விரிவாக்கப் பாதைக்கும் அடிக்கல் நாட்டுவதாகவும் அவர் கூறினார்.