தனியார் விமான நிறுவனம் மதுரை – அபுதாபி இடையே நேரடி விமான சேவையை வெள்ளிக்கிழமை தொடங்கியது.
புதிய சேவையின் முதல் நாளில், அபுதாபியிலிருந்து 134 பயணிகள் பிற்பகல் 1.15 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைந்தனர். அதன்பின், மதுரையிலிருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்ட விமானம் 174 பயணிகளுடன் அபுதாபிக்குப் புறப்பட்டு சென்றது.
விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்ததாவது: “இந்த நேரடி விமான சேவை திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய மூன்று நாட்களிலும் செயல்படும். பயணிகளின் வரவேற்பு எப்படி இருக்கின்றது என்பதைப் பொருத்து, இது அனைத்து நாட்களுக்கும் விரிவுபடுத்தப்படலாம்,” என்றனர்.
பொதுவாக, புதிய விமான சேவை தொடங்கும் போது விமானத்திற்கு ‘வாட்டர் கேனன்’ (தண்ணீர் பீச்சு) வரவேற்பு நிகழ்வு நடத்தப்படும். ஆனால், அகமதாபாத் விமான விபத்து சம்பவத்தை தொடர்ந்து, மதுரை – அபுதாபி விமானத்திற்கு வரவேற்பு நிகழ்வு விலக்கப்பட்டது எனவும் அதிகாரிகள் கூறினர்.