தா.மோ. அன்பரசனுக்கு ‘எம்எஸ்எம்இ நண்பன்’ விருது – ஜெர்மனியில் தமிழகத்துக்குப் பெருமை!
தமிழ்நாட்டின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் துறையின் அமைச்சர் தா.மோ. அன்பரசன், ஜெர்மனியில் நடைபெற்ற விழாவில் ‘எம்எஸ்எம்இ நண்பன்’ (Friend of MSMEs) என்ற விருதைப் பெற்றார். தொழில்முனைவோர் மேம்பாட்டிற்கான அர்ப்பணிப்பு, திறமையான நிர்வாகம், மற்றும் சமூகத்திற்கான பங்களிப்புக்காக, ஜெர்மனியில் வசிக்கும் தமிழர்கள் அமைத்துள்ள ஜெர்மன் இந்தியன் பிஸ்னஸ் அலையன்ஸ் (GIBA) என்ற அமைப்பின் சார்பில் இந்த விருது வழங்கப்பட்டது.
அமைச்சர் அன்பரசன், தற்போது ஐரோப்பா பயணமாக இருந்து, பாரிஸில் நடைபெறும் சர்வதேச ஸ்டார்ட்-அப் கருத்தரங்கில் கலந்துகொள்கின்றார். அவருடன் தமிழ்நாடு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சிவராஜா ராமநாதன், தென்னிந்திய வர்த்தக சபையின் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் தொழில் முனைவோர் பிரதிநிதிகள் உள்ளனர்.
இந்தக் குழுவினர் அண்மையில் ஜெர்மனியின் ஃபிராங்க்பேர்ட் நகரை வந்தடைந்தனர். அங்கு, ஃபிராங்க்பேர்ட் தமிழ் சங்கம் நடத்திய விழாவில் அமைச்சர் அன்பரசனுக்கு GIBA சார்பில் ‘எம்எஸ்எம்இ நண்பன்’ விருது வழங்கப்பட்டது.
அந்த விழாவில் பேசிய அமைச்சர் அன்பரசன், “இந்த விருதுக்கு மனமார்ந்த நன்றிகள். GIBA அமைப்பு, கோயம்புத்தூரில் அக்டோபர் 9, 10ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள சர்வதேச ஸ்டார்ட்-அப் மாநாட்டில் வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கேற்கும் வகையில் முயற்சி செய்கிறது,” என்றும் தெரிவித்தார்.
மேலும், “முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை டிரில்லியன் டாலர் நிலைக்கு கொண்டு செல்லும் கனவின் ஒரு பகுதியாக ஸ்டார்ட்-அப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தற்போது 11,000க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் 50%க்கும் அதிகமானவை பெண்கள் தொழில்முனைவோர்களால் நிர்வகிக்கப்படுகின்றன,” என்றார்.
இதே நிகழ்வில், ‘ஸ்டார்ட்-அப் சாம்பியன்’ விருது 2025க்காக தமிழ்நாடு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சிவராஜா ராமநாதன் அவர்களுக்கும் வழங்கப்பட்டது. புதுமை, பொருளாதார முன்னேற்றம் மற்றும் சமூக வளர்ச்சிக்கான பங்களிப்புக்காகவே இந்த விருது அவருக்கானது.
விழாவில் ஃபிராங்க்பேர்ட் தமிழ் சங்கத் தலைவர் பாலாஜி வரவேற்புரையுடன் நிகழ்ச்சியைத் தொடக்கி, இந்திய துணைத் தூதரகத்தின் கவுன்சில் ஜெனரல் பி.எஸ்.முபாரக் தலைமை வகித்தார். மேலும், GIBA அமைப்பின் உறுப்பினர்கள் பி.செல்வகுமார் மற்றும் க.நிர்மல் ராமன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
GIBA, ஜெர்மனியில் உள்ள மூன்சென் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு, இந்தியா மற்றும் ஜெர்மனி இடையிலான தொழில், முதலீடு, கலாச்சாரம் மற்றும் கல்வித் துறைகளில் பாலமாகச் செயல்படுகிறது. தமிழ்நாட்டின் அதிகாரப்பூர்வ டெஸ்க் (Tamil Nadu Desk) இயங்குவதற்கான பொறுப்பும் இந்த அமைப்பிடம் உள்ளது.
தமிழ்நாடு அரசு, வெளிநாட்டு வாழ் தமிழர் நலவாரியம், தென்னிந்திய வர்த்தக சபை (SICCI) மற்றும் GIBA ஆகிய அமைப்புகள் இணைந்து கடந்த ஜனவரியில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன. அதன் ஒரு பகுதியாக, கோயம்புத்தூரில் இந்தோ-ஜெர்மன் ஸ்டார்ட்-அப் இன்குபேட்டர் அமைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.