விருதுநகர் மாவட்டத்தில் நகர நில ஆவணங்களை நவீனமயமாக்கும் திட்டம் தொடக்கம்!
நில அளவுகளை மிகத் துல்லியமாக ஆக்கும் நோக்குடன், தமிழகத்தில் முதன்முறையாக நகர நில ஆவணங்களை நவீனமயமாக்கும் திட்டம் ஜூன் 17ம் தேதி விருதுநகரில் தொடங்கப்பட்டது. இந்த நக்ஷா திட்டத்தின் முதற்கட்டத்தில் 10 நகரங்களில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கீழ் செயல்படும் நில அளவை மற்றும் நிலவரித்துறை மூலமாக, செங்கல்பட்டு (மறைமலைநகர்), காஞ்சிபுரம், திருவண்ணாமலை, அரியலூர், தஞ்சாவூர், திண்டுக்கல், காரைக்குடி, கோவில்பட்டி, கோவை மாநகராட்சியின் 7 வார்டுகள் மற்றும் விருதுநகர் ஆகிய நகரங்களில் இந்த திட்டம் நடைமுறைக்கு வருகிறது.
இத்திட்டம் மூலம், வருவாய்துறையின் நில அளவுத் தகவல்களும், நகராட்சித் துறையின் சொத்து வரி விவரங்களும் ஒருங்கிணைக்கப்பட்டு இணையத்தில் கிடைக்கும் வகையில் மேம்படுத்தப்படும். இதனால் நில உரிமையாளர்கள் தங்கள் நில விவரங்களை, துல்லியமான பரப்பு மற்றும் புள்ளி அடிப்படையிலான வரைபடத்துடன் அறிந்து கொள்ள முடியும். திட்டத்தின் முதல் கட்டத்திற்காக ரூ.10.86 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
திட்ட தொடக்க விழா விருதுநகர் K.V.S. மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. வருவாய்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நவீன ட்ரோன் மூலம் திட்டத்தை தொடங்கி வைத்தார். அவர் தெரிவித்ததாவது, கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் 13.85 லட்சம் இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் விருதுநகரில் மட்டும் 49,886 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், 1.67 கோடி இணைய வழி பட்டா மாற்ற உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆண்டுக்கு சுமார் 41.7 லட்சம் மக்கள் இணைய வழி மூலம் இந்த சேவையைப் பெற்றுள்ளனர் என்றும் தெரிவித்தார்.
இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் வீ.ப. ஜெயசீலன் தலைமை வகித்தார். நில அளவைத் துறை இயக்குநர் மதுசூதணன் ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், எம்.எல்.ஏ சீனிவாசன், நகர்மன்றத் தலைவர் மாதவன் மற்றும் அரசு அதிகாரிகள், பயனாளிகள் பலரும் கலந்து கொண்டனர்.