திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் அமைந்துள்ள இஸ்ரோவின் திரவ இயக்க உந்தும் மையத்தில், ராக்கெட்டுகளில் பயன்படுத்தப்படும் விகாஸ் எனும் இன்ஜின் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
இந்த சோதனை, இஸ்ரோ மேற்கொண்டு வரும் ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாகக் கணிக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் நான்கு இந்திய விஞ்ஞானிகள் 400 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள விண்வெளிக்கு அனுப்பப்பட்டு, விண்கலத்தை அப்பகுதியில் நிலைநிறுத்தி ஆராய்ச்சிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
ககன்யான் திட்டத்திற்கான ராக்கெட்டில் பொருத்தப்படவுள்ள பல்வேறு வகை இன்ஜின்கள் – கிரையோஜனிக், செமி கிரையோஜனிக் மற்றும் விகாஸ் இன்ஜின்கள் – இஸ்ரோவின் பல மையங்களில் தொடர்ந்து சோதனை செய்யப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில், மகேந்திரகிரியில் நடைபெற்ற சோதனையில், திரவ எரிபொருளால் இயக்கப்படும் மேம்படுத்தப்பட்ட விகாஸ் இன்ஜின் 17 விநாடிகள் வெற்றிகரமாக செயல்பட்டதாகவும், இந்நவீன இன்ஜினை பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகளில் பயன்படுத்த இயலும் எனவும் இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவித்தன.