நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட தமிழக ஜவுளித்துறை கடும் நெருக்கடியில்: தொழில்துறையினர் குற்றச்சாட்டு
தமிழகத்தின் ஜவுளித்துறை பல நூற்றாண்டுகளாக வளர்ந்து வந்த பாரம்பரியம் வாய்ந்த தொழிலாகும். இத்துறையில், குறிப்பாக கிராமப்புற பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. ஆனால், மத்திய அரசு ஆண்டுகளாக இந்தத் துறையை ஊக்குவிக்கும் முக்கிய கோரிக்கைகளை பூர்த்தி செய்யாததால், இந்தத் தொழில் வலிமையாக பாதிக்கப்படும் நிலையில் உள்ளது என்று தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த கோரிக்கைகளில், பஞ்சு இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட 11% வரியை நீக்குதல், செயற்கை இழை இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தரக் கட்டுப்பாட்டை நீக்குதல் மற்றும் இந்திய பருத்தி கழகம் (CCI) தமிழ்நாட்டில் கிளை அமைத்தல் உள்ளிட்டவை அடங்கும்.
இந்த விவகாரம் குறித்து தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (SISPA) கெளரவ செயலாளர் ஜெகதீஷ் சந்திரன் கூறியதாவது: “இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 300 லட்சம் பேல்கள் (ஒவ்வொரு பேலும் 356 கிலோ) பஞ்சு உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் பாதி அளவான 150 லட்சம் பேல்கள் இந்திய பருத்தி கழகம் (CCI) மூலமாக கொள்முதல் செய்து, நூற்பாலைகளுக்கு வழங்கப்படுகிறது. இதில் 70 சதவீதம் பஞ்சு தமிழ்நாட்டிலுள்ள நிறுவனங்கள் வாங்குகின்றன. கடந்த 30 ஆண்டுகளாக, CCI கிளையை தமிழ்நாட்டில் நிறுவ வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டாலும், அது இன்று வரை நடைமுறைக்கு வரவில்லை,” எனக் கூறினார்.
தமிழக அரசு 1% செஸ் வரியை நீக்கியும், அந்த கிளை தொடங்கப்படவில்லை என்றும், இது தொழில்துறைக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
மறுசுழற்சி ஜவுளித் தொழில்கூட்டமைப்பின் (RTF) தலைவர் ஜெயபால் கூறியதாவது: “பருத்தி, செயற்கை இழை, ஆடை உற்பத்தி என ஜவுளித்துறை முழுவதும் நாட்டில் அதிக வேலைவாய்ப்பையும், அன்னிய செலாவணியையும், வரி வருவாயையும் உருவாக்கி வருகிறது. பாலிஸ்டர், விஸ்கோஸ் போன்ற செயற்கை இழைகள் வெறும் இரண்டு தனியார் நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இந்நிறுவனங்களுக்கு பயன்படும் வகையில், செயற்கை இழைகளின் இறக்குமதிக்கு தரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.”
“இந்த ‘QCO BIS’ கட்டுப்பாடால், செயற்கை இழைகளின் விலை 18 முதல் 30% வரை உயர்ந்துள்ளது. இதனால் தொழில்துறைக்கு பெரும் சுமை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு தொழில்துறையின் கோரிக்கைகளை அலட்சியமாக இருக்கிறது. அதனால்தான் தமிழ்நாட்டில் ஜவுளித் தொழில் தள்ளாடி வருகிறது,” என்றார்.
தமிழ்நாடு ஓபன் எண்ட் மில்கள் சங்கத்தின் தலைவர் அருள்மொழி கூறியதாவது: “பஞ்சு இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட 11% வரியை ரத்து செய்ய மத்திய அரசிடம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குறைந்தது சில மாதங்களுக்காவது வரி விலக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு இந்த கோரிக்கைகளை நிறைவேற்றினால், தமிழக ஜவுளித்துறை மீண்டும் நிலைநிறுத்த வாய்ப்பு உள்ளது,” என்றார்.
இதனிடையே, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை சமீபத்தில் கோவையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், “தமிழக ஜவுளித்துறையினரின் பிரச்சனைகளை மத்திய அமைச்சரை சந்தித்து தீர்த்து வைத்தோம்; தற்போது அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை” எனக் கூறினார்.
இதற்கு எதிர்வினையாக RTF தலைவர் ஜெயபால் கூறியதாவது: “அவரது கூற்று உண்மைக்கு புறம்பானது. மத்திய அரசிடம் இருந்து எந்த உதவியும் எங்களுக்காக அவர் பெற்றுத்தரவில்லை. தொழில்துறை கடும் நெருக்கடியில் இருக்கும் நிலையில், பிரச்சனையில்லை என கூறுவது முற்றிலும் தவறானது” என்றார்.