ஈரான் – இஸ்ரேல் மோதல் காரணமாக கோவைவுக்கு வரவிருந்த அபுதாபி விமானம் ரத்து
ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே உருவான போர் சூழ்நிலையால், ஜூன் 24ஆம் தேதி அபுதாபியில் இருந்து கோவைக்கு வரவிருந்த விமான சேவை நிறுத்தப்பட்டது.
தற்போது, கோவையில் இருந்து ஷார்ஜா மற்றும் அபுதாபிக்கு நேரடி விமானங்கள் இயக்கப்படுகின்றன. ஷார்ஜாவிற்கு வாரத்தில் ஐந்து நாட்கள், அபுதாபிக்கு வாரத்தில் நான்கு நாட்கள் விமான சேவை நடைபெறுகிறது. இந்த சூழலில், மேற்கண்ட போர் நிலைமையின் தாக்கமாக, இன்று (ஜூன் 24) அபுதாபியில் இருந்து கோவை நோக்கி வரவிருந்த விமானம் ரத்து செய்யப்பட்டது.
இதுகுறித்து கோவை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்ததாவது: “கோவையில் இருந்து அபுதாபிக்கு வாரம் தோறும் செவ்வாய், வியாழன், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விமானங்கள் இயக்கப்படுகின்றன. இன்று மட்டும், போர் காரணமாக அபுதாபியில் இருந்து வரவிருந்த விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், கோவையில் இருந்து அபுதாபி நோக்கி புறப்பட்ட விமானம் வழமைபோல் மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருந்தது” என்றனர்.
மேலும், கோவையிலிருந்து ஷார்ஜாவுக்கு திங்கள் மற்றும் செவ்வாயை தவிர மற்ற ஐந்து நாட்களிலும் விமான சேவை வழங்கப்படுகிறது. எதிர்வரும் நாட்களில், கோவையில் இருந்து ஷார்ஜா மற்றும் அபுதாபிக்கு செல்லும் விமான சேவைகளில் தினசரி அடிப்படையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், பயணிகள் முன்னதாகவே தங்களது பயண திட்டங்களை உறுதி செய்து, விமான நிறுவனங்களிடமிருந்து நிலையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.