அமெரிக்க வரி தாக்கத்தைக் குறைக்க அவசர கடன் நிவாரணம் தேவை: ‘சைமா’ கோரிக்கை

அமெரிக்காவின் புதிய வரி விதிப்பால் ஏற்பட்ட பாதிப்பை சமாளிக்க, அவசர கால கடன் உத்தரவாதத் திட்டம் (ECLGS) மூலம் 30 சதவீதம் பிணையமில்லா கடனும், 5 சதவீத வட்டி சலுகையும் வழங்க வேண்டும் என தென்னிந்திய மில்கள் சங்கம் (சைமா) கோரியுள்ளது. இதற்காக தமிழக முதல்வர், பிரதமரிடம் பரிந்துரை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து சைமா தலைவர் டாக்டர் எஸ். கே. சுந்தரராமன் கூறியதாவது:

“நாட்டின் மொத்த ஜவுளி உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கை வகிக்கும் தமிழ்நாடு, ஆடை மற்றும் ஜவுளி ஏற்றுமதியில் 28 சதவீத பங்கைக் கொண்டுள்ளது. உலகளாவிய போட்டித் திறனை உயர்த்தவும், ஏற்றுமதியை மேம்படுத்தவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

நூற்புத் துறைக்கான 6% வட்டி சலுகை, ஆடை மற்றும் வீட்டு ஜவுளித் துறைக்கான 50% மூலதன மானியம், தொழில்நுட்ப ஜவுளிக்கான 50% உதவி போன்ற திட்டங்கள் தொழில்துறைக்கு உற்சாகத்தை வழங்கியுள்ளன. ஆனால் அமெரிக்கா விதித்துள்ள 50% வரி, மிகப்பெரிய ஏற்றுமதி மாநிலமான தமிழ்நாட்டிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா முன்னிலையில் பல தொழில்துறை பிரதிநிதிகள், அமெரிக்க வரி சுமையைக் குறைக்கும் வகையில் மாநில மற்றும் மத்திய அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, சில நாட்களுக்கு முன்பு தமிழக முதல்வரை சந்தித்து குறிப்பாணை அளித்தனர்.

தற்போதைய நெருக்கடி காரணமாக உற்பத்தி தடை, புதிய சந்தைகள் தேடல், வாடிக்கையாளர்களை தக்கவைத்தல் போன்ற சிக்கல்கள் உருவாகியுள்ளன. இதை சமாளிக்க:

  • அசல் கடனை திருப்பிச் செலுத்த 2 ஆண்டுகள் கூடுதல் அவகாசம்,
  • ECLGS கீழ் 30% பிணையமில்லா கடனும் 5% வட்டி சலுகையும்,
  • பருத்தி மீதான 11% இறக்குமதி வரியை நீக்கல்,
  • சர்வதேச அளவில் மூலப்பொருள் கிடைப்பதை உறுதி செய்தல்

போன்ற நடவடிக்கைகளை பிரதமரிடம் பரிந்துரைக்க வேண்டும் என கோரப்பட்டது.

மேலும், தற்போதைய நெருக்கடியை எதிர்கொள்ள, ஒரே சாளர முறையின் மூலம் ஏற்றுமதி நிதியை விரைவாகத் திருப்பி வழங்கவும், GST ரீபண்ட் கோரிக்கைகளை விரைவுபடுத்தவும், பணி மூலதனச் சிக்கலைத் தவிர்க்கவும் மாநில அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என சுந்தரராமன் வலியுறுத்தினார்.

Facebook Comments Box