ஜிஎஸ்டி வரி குறைப்பை வரவேற்ற தொழில் துறையினர் – பிரதமரின் தீபாவளி அறிவிப்புக்கு எதிர்பார்ப்பு

வரவிருக்கும் தீபாவளி தினத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு உதவும் வகையில் ஜிஎஸ்டி வரி விதிப்பில் முக்கியமான மாற்றங்கள் அறிவிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இந்த அறிவிப்பு தொழில் துறையினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதுகுறித்து கோவை தொழில் அமைப்புகள் தெரிவித்தவை:

இந்திய தொழில் வர்த்தக சபை, கோவை தலைவர் ராஜஷ் லுந்த்

“சுதந்திர தின உரையில் பிரதமர் அறிவித்த வரி குறைப்பு, தானியங்கி ஜிஎஸ்டி பதிவு உள்ளிட்ட அறிவிப்புகள் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பெரிதும் பயனளிக்கும். வணிகத்தைக் குறைந்த சிக்கலுடன் நடத்த உதவும் இத்தகைய நடவடிக்கைகள், பொருளாதார முன்னேற்றத்துக்கும் வலுசேர்க்கும். தீபாவளி அறிவிப்புக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்.” என்றார்.

தமிழ்நாடு கைத் தொழில் மற்றும் குறுந் தொழில் முனைவோர் சங்க (டாக்ட்) மாவட்ட தலைவர் ஜே. ஜேம்ஸ்

*“பெரிய அளவில் ஜிஎஸ்டி மாற்றங்கள் கொண்டு வந்து, தொழில்துறையினருக்கு ஊக்கம் அளிப்பதாக பிரதமர் கூறியிருப்பது மகிழ்ச்சி தருகிறது. 2017-ம் ஆண்டு ஜிஎஸ்டி அமலுக்கு வந்ததிலிருந்து பல குழப்பங்களால் குறு, சிறு தொழில் முனைவோர் சிரமங்களைச் சந்தித்துவருகிறார்கள். குறிப்பாக, வரி செலுத்த தாமதித்தால் அபராதம், இ-வே பில் ரத்து, வங்கி கணக்கு முடக்கம் போன்ற நடவடிக்கைகள் பெரிய சிரமங்களை ஏற்படுத்தின.

இந்நிலையில், தீபாவளி நாளில் வெளியாக உள்ள அறிவிப்பு தொழில்துறை வளர்ச்சிக்கு வழிகாட்டும். தொழில் துறையினரின் பிரச்சினைகள் தீரும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது.”* எனக் குறிப்பிட்டார்.

Facebook Comments Box