பிரதமரின் ஜிஎஸ்டி குறைப்புச் செய்தியால் சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் உயர்ச்சி

ஜிஎஸ்டி வரி நிலைகள் 2 ஆகக் குறைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்ததையடுத்து, சென்செக்ஸ் நேற்று வர்த்தகத்தின் நடுப்பகுதியில் 1,000 புள்ளிகள் உயர்ந்தது. கடந்த சில வாரங்களாக இந்திய பங்குச்சந்தைகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

இந்நிலையில், சுதந்திர தினம் மற்றும் சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாள் விடுமுறைக்குப் பிறகு நேற்று காலை இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் துவங்கின. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் வரை ஏற்றமடைந்தது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டி 350 புள்ளிகள் உயர்ந்து 25,000 புள்ளிகளை கடந்தது.

ஆனால், பிற்பகலில் பங்குச்சந்தைகள் சற்று சரிவை சந்தித்தன. வர்த்தக நிறைவில் சென்செக்ஸ் 676 புள்ளிகள் உயர்ந்து 81,274-ல் முடிவடைந்தது. நிப்டி 245 புள்ளிகள் உயர்ந்து 24,877-ல் நிலைபெற்றது. தகவல் தொழில்நுட்பத் துறையைத் தவிர, வாகனம், நிலத்துறை, உலோகம் உள்ளிட்ட அனைத்து துறைகளின் குறியீடுகளும் கணிசமான உயர்வைப் பெற்றன. சிறு நிறுவனங்கள் குறியீடு (1.14%), நடுத்தர நிறுவனங்கள் குறியீடு (1.43%) ஆகியவையும் உயர்ந்தன.

டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற 79-வது சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ஜிஎஸ்டி வரி அமைப்பு மாற்றப்படும் எனத் தெரிவித்தார். இதனால் கார், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவைகளின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக வாகனத் துறை பங்குகள் நேற்று அதிகரித்தன.

மோடி தலைமையில் ஆலோசனை: பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, வேளாண்மைத் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தற்போது ஜிஎஸ்டி அமைப்பில் 5%, 12%, 18%, 28% ஆகிய நான்கு நிலை வரிவிகிதங்கள் உள்ளன. இதை 5% மற்றும் 18% என இரண்டு நிலை வரிவிகிதங்களாக மாற்றுவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

Facebook Comments Box