மியூச்சுவல் பண்ட் விநியோகத்துக்கு 1 லட்சம் தபால்காரர்களுக்கு பயிற்சி
இந்திய மியூச்சுவல் பண்ட் சங்கம் (ஏஎம்எப்ஐ) மற்றும் இந்தியா போஸ்ட் ஒப்பந்தம் செய்துள்ளனர். இதன்மூலம் நாட்டில் ஒரு லட்சம் தபால்காரர்களுக்கு மியூச்சுவல் பண்ட் தொடர்பான பயிற்சி வழங்கி, பொதுமக்களைச் சேர்க்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதன்படி பயிற்சி பெறும் தபால்காரர்கள், மியூச்சுவல் பண்ட் விநியோகஸ்தர்கள் என்று அழைக்கப்படுவர்.
இதன்மூலம் அவர்கள் நாட்டிலுள்ள சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் மியூச்சுவல் பண்ட் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அந்தத் திட்டத்தில் மக்களைச் சேர்க்கும் பணிகளைச் செய்வர்.
ஏஎம்எப்ஐ தலைமைச் செயல் அதிகாரி வெங்கட் நாகேஸ்வர் சலசானி இதுகுறித்து கூறியதாவது: “ஒரு லட்சம் தபால்காரர்களுக்கு மியூச்சுவல் பண்ட் தொடர்பான பயிற்சி வழங்கப்படும். இதற்குப் பிறகு 4 மாநிலங்களைத் தேர்வு செய்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 மியூச்சுவல் பண்ட் விநியோகஸ்தர்கள் நியமனம் செய்யப்படுவர். அடுத்த ஆண்டில் அந்த மாநிலங்களின் ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 மியூச்சுவல் பண்ட் விநியோகஸ்தர்கள் இருப்பர்.”
பிஹார், ஆந்திரா, ஒடிசா மற்றும் மேகாலயா ஆகிய 4 மாநிலங்களில் முதல்கட்டமாக இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும். 4 மாநிலங்களில் மொத்தம் 20,000 மியூச்சுவல் பண்ட் விநியோகஸ்தர்கள் இருப்பர். தபால்காரர்களுக்கு கூடுதலாக பயிற்சி தேவைப்பட்டால், உதவி செய்ய சான்றிதழ் பெற்ற மியூச்சுவல் பண்ட் நிபுணர்கள் குழு அமைக்கப்படும்.