இந்தியாவில் பெண்களின் வேலைவாய்ப்பு விகிதம் 40.3% ஆக உயர்வு: மத்திய அரசு

நாட்டில் பெண்களின் வேலைவாய்ப்பு விகிதம் 2023-24 நிதி ஆண்டில் 40.3% ஆக உயர்ந்ததாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காலமுறை தொழிலாளர்கள் கணக்கெடுப்பு (PLFS) தரவுகளின் அடிப்படையில், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “நாட்டில் 70% அளவிற்கு பெண் தொழிலாளர் பங்களிப்பை உறுதி செய்வது 2047-ம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை அடைவதற்கான முக்கியத்துவங்களில் ஒன்றாகும்” என்று கூறப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது பெண்கள் பாரம்பரிய சூழலுக்குள் அடைந்துவிடாமல் தடைகளை உடைத்து நாட்டின் எதிர்கால பொருளாதாரத்தை வடிவமைக்கின்றனர். ஊரகத் தொழில்முனைவோரில் இருந்து பெருநிறுவனங்களின் தலைவர்களாக பெண்கள் தலைமை வகித்து வருகின்றனர்.

அறிக்கையின் படி, பெண்களின் வேலைவாய்ப்பு விகிதம் 2017-18-ம் ஆண்டில் 22% இருந்த நிலையில், 2023-24-ம் ஆண்டில் 40.3% ஆக உயர்ந்துள்ளது. இதே காலக்கட்டத்தில் வேலையில்லாதோர் விகிதம் 5.6%-லிருந்து 3.2%-மாக குறைந்துள்ளது.

ஊரகப் பகுதிகளில் பெண் தொழிலாளர்களின் பங்களிப்பு 96%, நகரப்புறங்களில் 43% வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. பெண்கள் பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு 2013-ம் ஆண்டு 42% இருந்த நிலையில், 2024-ம் ஆண்டு 47.53% ஆக உயர்ந்துள்ளது. முதுநிலை பெண் பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு 2017-18-ம் ஆண்டில் 34.5% இருந்து 2023-24-ம் ஆண்டில் 40% ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 7 ஆண்டுகளில் 1.56 கோடி பெண்கள் அமைப்புசார் பணிகளில் சேர்ந்துள்ளனர். முத்ரா கடன்களில் 68% கடன்கள் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments Box