இந்தியாவில் டெஸ்லா கார்களுக்கு 600 பேர் முன்பதிவு
இந்தியாவில் டெஸ்லா மின்சார கார்களுக்கு தற்போது 600 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் நிறுவிய டெஸ்லா நிறுவனம், உலகெங்கிலும் அதிகமான நவீன மின்சார சொகுசு கார்களை தயாரித்து விற்பனை செய்கிறது. இந்திய ஆட்டோ நிபுணர்கள் இதுகுறித்து தெரிவித்ததாவது:
இந்தியாவில் மொத்தம் 35.4 கோடி வாகனங்கள் ஓடுகின்றன. இதில் கார்கள் 5 கோடியை கடக்கின்றன. இந்த எண்ணிக்கையில் சுமார் 5 சதவீதம் மின்சார கார்கள் தான். இதனால் இந்திய கார் சந்தையில் தன் நிலையை வலுப்படுத்த டெஸ்லா நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.
இதற்காக மும்பை மற்றும் டெல்லியில் டெஸ்லா ஷோரூம்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு ஷோரூம்களிலிருந்து ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் 2,500 கார்கள் விற்பனை செய்யத் திட்டமிட்டிருந்தது. ஆனால் அமெரிக்க அரசு இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்ததால் முன்பதிவு எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதுவரை 600 பேர் மட்டுமே முன்பதிவு செய்துள்ளனர்.
வரிவிதிப்பு விவகாரங்கள் காரணமாக இந்தியா–அமெரிக்கா இடையேயான மோதல் தொடர்ந்தால், டெஸ்லா சீனாவில் உள்ள ஆலையிலிருந்து இந்தியாவுக்கு கார்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது. அதேசமயம் இந்தியா–ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட பேச்சுவார்த்தை நடக்கிறது. ஒப்பந்தம் கையெழுத்தானால், ஜெர்மனியில் இருந்து இந்தியாவுக்கு டெஸ்லா கார்களை இறக்குமதி செய்ய முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் டெஸ்லாவின் Y மாடல்கள் விற்பனைக்கு வருகிறது. ஒரு காரின் தாழ்வான விலை சுமார் ரூ.60 லட்சம். 30 நிமிடங்களில் பேட்டரியின் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்யலாம். மும்பை மற்றும் டெல்லி பகுதிகளில் டெஸ்லா சார்பில் சார்ஜிங் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.