சென்னை ரயில்வே கோட்டத்தில் முதன்முறையாக மின்சார ஆட்டோக்களை சரக்கு ரயிலில் அனுப்பி சாதனை
சென்னை ரயில்வே கோட்டத்தில், முதன்முறையாக புதிய மின்சார ஆட்டோக்களை சரக்கு ரயிலில் ஏற்றி அனுப்பி சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரயில்வேக்கு ரூ.18.75 லட்சம் வருவாய் கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தெற்கு ரயில்வேயில், சென்னை ரயில்வே கோட்டத்தில் சரக்கு ரயில் போக்குவரத்தை மேம்படுத்த 2020-ம் ஆண்டுக்கு பிறகு பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக, நவீன வசதிகள் கொண்ட சரக்கு ரயில்களை அறிமுகப்படுத்துதல், சரக்குகளை கையாள ஏற்ற ரயில் நிலையத்தை அமைத்தல், வணிக மேம்பாட்டு குழு அமைத்தல் போன்ற நடவடிக்கைகள் எடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து, சரக்கு ரயில் போக்குவரத்து வேகமாக வளர தொடங்கியது. தற்போது சென்னையிலிருந்து நாட்டின் பல நகரங்களுக்கு சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், சென்னை ரயில்வே கோட்டத்தில் முதன்முறையாக புதிய மின்சார ஆட்டோக்களை சரக்கு ரயிலில் ஏற்றி அனுப்பி சாதனை படைக்கப்பட்டது.
மான்ட்ரா எலக்ட்ரிக் (முருகப்பா குழுமம்) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மின்சார ஆட்டோக்கள், சரக்கு ரயிலில் ஏற்றி ஆந்திரா மாநிலம் தடா ரயில் நிலையத்திலிருந்து மேற்குவங்கம் மாநிலம் ரங்கபாணிக்கு நேற்று அனுப்பப்பட்டன.
சென்னை ரயில்வே கோட்ட அதிகாரர்கள் கூறியதாவது:
- இதன்மூலம் சரக்கு வர்த்தகத்தில் புதிய அத்தியாயம் தொடங்கப்பட்டுள்ளது.
- மின்சார வாகனங்களை பெரிய அளவில் ரயில் மூலம் கொண்டு செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
- ஒவ்வொரு சரக்கு ரயில் போக்குவரத்தின் மூலமும் ரூ.18.75 லட்சம் வருவாய் கிடைக்கும்.
நடப்பு நிதியாண்டில் 8 சரக்கு ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் ரூ.1.50 கோடி வருவாய் பெறும் எதிர்பார்ப்பு உள்ளது.
சாலை போக்குவரத்துடன் ஒப்பிடும் போது, ரயில் மூலம் மின்சார வாகனங்களை கொண்டு செல்லும்போது கரியமில வாயு வெளியேற்றம் குறைகிறது. இதன் மூலம் ரயில்வே நாட்டின் பசுமைப் போக்குவரத்து சேவையாக தனது பங்கைக் உறுதி செய்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.