வருமான வரி கணக்கு தாக்கலுக்கு மேலும் ஒரு நாள் அவகாசம் – காரணம் என்ன?
நடப்பு ஆண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 31 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் பல தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, அவகாசம் செப்டம்பர் 15 வரை நீட்டிக்கப்பட்டது.
கடைசி தேதியை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் இணையதளத்தின் மூலம் கணக்கை தாக்கல் செய்ய முயன்றதால், திடீரென வருமான வரித் துறை இணையதளம் செயலிழந்தது. இதனால் சமூக வலைதளங்களில் பெருமளவில் குறைகளை வெளியிட்டனர். அவகாசத்தை மேலும் நீட்டிக்க கோரிக்கை எழுந்தது.
இந்த சூழ்நிலையில், வருமான வரி தாக்கலுக்காக கூடுதலாக ஒருநாள் அவகாசம் வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில், கடைசி நாளன்று ஏராளமானோர் தங்கள் கணக்கை தாக்கல் செய்தனர்.
இதுகுறித்து மத்திய நேரடி வரிகள் வாரிய வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
“தொழில்நுட்ப கோளாறுகளால் வருமான வரி தாக்கலுக்காக ஒரு நாள் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது. இதுவரை 7.3 கோடி பேர் தாக்கல் செய்துள்ளனர். காலக்கெடு முடிந்த பிறகும் தாக்கல் செய்யலாம். ஆனால், ரூ.5 லட்சம் வருமானத்திற்கு உட்பட்டவர்களுக்கு ரூ.1,000 அபராதம், அதற்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். டிசம்பர் 31க்குப் பிறகு தாக்கல் செய்தால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும்” என தெரிவித்தனர்.