ஜிஎஸ்டி குறைப்பு அமலுக்கு வந்ததால் பொதுமக்கள், ஊழியர்கள், கடை உரிமையாளர்கள் மகிழ்ச்சி

மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) குறைத்துள்ளது. புதிய குறைக்கப்பட்ட வரி நேற்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

வீட்டு உபயோகப் பொருட்களின் விற்பனையகக் கிளை மேலாளர் ஆர்.கணேஷ்: ஜிஎஸ்டி குறைப்பின் பின்னர் டிவி, ஏசி உள்ளிட்ட வீட்டு தேவையான பொருட்களின் விலை எவ்வளவு குறைந்துள்ளது என பலர் நேரடியாகவும், போன் மூலமாகவும் விசாரிக்கின்றனர். பலர் முன்பதிவு செய்துவிட்டுள்ளனர். சிலர் வாங்கியுள்ளனர். விற்பனை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இது மகிழ்ச்சி அளிக்கிறது.

ஐடி ஊழியர் ராம் பரணி: ஜிஎஸ்டி குறைப்பு வரவேற்கத்தக்கது. ஆனால் வாஷிங் மெஷின், பிரிட்ஜ் உள்ளிட்ட முக்கிய பொருட்களுக்கு வரி குறைக்கப்படவில்லை. நான் இந்த தீபாவளிக்கு டிவி, வாஷிங் மெஷின் வாங்க திட்டமிட்டேன். அதில் டிவிக்கு மட்டுமே வரி குறைக்கப்பட்டுள்ளது. மற்ற முக்கிய பொருட்களுக்கும் வரி குறைப்பதும், தொழில் நிறுவனங்கள் குறைந்தது ஓராண்டு விலையை உயர்த்தாமல் கண்காணிக்க வேண்டும்.

கார் விநியோகஸ்தர் செந்தில்நாதன்: பண்டிகையை முன்னிட்டு ஜிஎஸ்டி குறைக்கப்பட்டது நல்ல முயற்சியாகும். பெரும்பாலான மக்களுக்கு கார், பைக் வாங்கும் ஆர்வம் உள்ளது. தற்போது வரி மாற்றத்தால் விலை குறைந்ததால், ஷோரூம்களுக்கு அதிக வாடிக்கையாளர்கள் விசாரிக்க வருகின்றனர். இதனால் இந்த ஆண்டு விற்பனை அதிகரிக்கும் என நம்புகிறோம்.

வீட்டு உபயோகப் பொருள் விற்பனை மேலாளர் குலோத்துங்கன்: ஜிஎஸ்டி குறைந்தாலும் வழக்கமான விற்பனையே இருந்தது. ரூ.15 ஆயிரம் விலை உள்ள டிவிக்கு 10% வரி குறைப்பால் ரூ.1,500 விலை குறையும். அதற்காக மக்கள் வாங்குவார்கள் என்று கூற முடியாது; தேவையுள்ளவர்கள் மட்டுமே வாங்குவர். இருப்பினும், ஷோரூமில் வாங்கியவர்கள் மகிழ்ச்சியுடன் இருந்தனர். அதற்கான காரணம் இந்த வரி குறைப்பு.

பால் விநியோகஸ்தர் பர்ஜின்: அம்பத்தூர் பகுதியில் பால் மற்றும் பால் பொருட்களை வாங்கி வீடுகளுக்கு விநியோகம் செய்வது பகுதி நேர வேலையாக உள்ளது. சில பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறைக்கப்பட்டதால் வாடிக்கையாளர் அதிகளவில் வாங்குவார்கள் என எதிர்பார்க்கிறோம். இதனால் எனக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

பொறியாளர் விஸ்வ பிரியா: ஜிஎஸ்டி குறைந்ததால் அன்றாட பயன்பாட்டுப் பொருட்கள் வாங்கும்போது விலை சற்று குறைந்தது. பேக்கரி பொருட்களுக்கும் ஜிஎஸ்டி குறைந்ததால் விலை குறைந்துள்ளது. என் நண்பர் ஒருவர் கார் வாங்கும்போது ரூ.70 ஆயிரம் சேமித்ததாக தெரிவித்தார். இன்னும் சில நாட்களில் நான் கார் வாங்க திட்டமிட்டுள்ளேன்.

கடை உரிமையாளர் பிரபாகரன்: ஜிஎஸ்டி குறைப்பை வியாபாரிகள் பல நாட்களாக எதிர்பார்த்தனர். வரும் நாட்களில் விற்பனை அதிகரிக்கும் என நம்புகிறோம். ஏற்கெனவே வாங்கி வைக்கப்பட்ட பொருட்கள் விற்பனை செய்ய சிரமம் உள்ளது. ஆடம்பர பொருட்களை தவிர, அதிகம் பயன்படுத்தப்படும் அத்தியாவசியப் பொருட்களுக்கு வரி குறைக்கப்படலாம்.

ஹார்டுவேர்ஸ் உரிமையாளர் ஆர். கருணாகரன்: உணவுப் பொருட்கள், அன்றாட வீட்டு உபயோகப் பொருட்கள், ஆடைகள் போன்றவற்றிற்கு ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பலன் அடைவார்கள். இருசக்கர வாகனங்களுக்கு ஜிஎஸ்டி குறைப்பு தொழிலாளர்களுக்கும் பலன் அளிக்கும். மொத்தத்தில், இந்த வரி குறைப்பு பொதுமக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும்.

Facebook Comments Box