மொராக்கோவில் இந்திய தனியார் துறையின் ராணுவ கவச வாகன தொழிற்சாலை: ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்
வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில், இந்திய தனியார் துறையின் முதலாவது ராணுவ கவச வாகன உற்பத்தி ஆலையை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று திறந்து வைத்தார். இந்த விழாவில் மொராக்கோ பாதுகாப்பு அமைச்சர் அப்தெலதீப் லவுடி கலந்து கொண்டார்.
டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனம், டிஆர்டிஓ உடன் இணைந்து, காசாபிளாங்கா அருகே நவீன வசதிகளுடன் கூடிய ராணுவ கவச வாகன (WhAP 8×8) உற்பத்தி நிலையத்தை உருவாக்கியுள்ளது.
இதுகுறித்து ராஜ்நாத் சிங் தெரிவித்ததாவது: “தற்சார்பு இந்தியாவின் நோக்கம் உள்நாட்டு தேவைகளுக்காக மட்டும் தயாரிப்பது அல்ல. உயர்தர தொழில்நுட்பத்துடன் கூடிய உறுதியான பாதுகாப்பு உபகரணங்களை உலக நாடுகளுக்கும் வழங்குவதே முக்கிய இலக்கு. அதனை முன்னிட்டு ஆப்பிரிக்க கண்டத்தின் மொராக்கோவில் இந்த பாதுகாப்பு உற்பத்தி தளம் நிறுவப்பட்டுள்ளது.”
அவர் மேலும் கூறியதாவது: “இந்தியாவின் தற்சார்பு என்றால் தனிமைப்படுத்தல் அல்ல; பிற நாடுகளை சார்ந்து இருக்காமல், தேவையற்ற செல்வாக்குகளுக்கு ஆளாகாமல், தேசிய நலன்களை முன்னிட்டு சுயமாக முடிவெடுத்து செயல்படும் திறனை உருவாக்குவதாகும். ‘மேக் இன் இந்தியா’ உடன் ‘மேக் வித் பிரெண்ட்ஸ்’ மற்றும் ‘மேக் பார் வேர்ல்ட்’ என்பதையும் பின்பற்றுகிறோம். மொராக்கோ, ஐரோப்பிய சந்தைக்கு நுழைவாயிலாக விளங்குகிறது.”
மொராக்கோவில் 20,000 சதுர மீட்டரில் அமைக்கப்பட்டுள்ள டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் பாதுகாப்பு உற்பத்தி ஆலை, அடுத்த மாதம் முதல் ராயல் மொராக்கோ ராணுவத்துக்கான கவச வாகனங்களை தயாரித்து வழங்க தொடங்க உள்ளது.