ஈரான், வெனிசுலாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்க அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும்: இந்தியா வலியுறுத்தல்
ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ததால் இந்தியா மீது 25 சதவீத கூடுதல் வரி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் விதித்தது. உக்ரைன் தொடர்பான மோதலால் உருவான சர்வதேச தடைகள் தொடரும்போது ரஷ்யா கச்சா எண்ணெயை குறைந்த விலையில் வழங்கத் தொடங்கியது.
இதையடுத்து, இந்தியா தனது மொத்த தேவையின் 90% ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்கிறது. இதனால், இந்தியாவின் இறக்குமதி செலவுகள் பெரிதும் குறைந்தன. இந்த சூழலில், ஈரான் மற்றும் வெனிசுலாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும்போது மட்டுமே இதேபோன்ற சாதக நிலை நீடிக்கும்.
புளும்பெர்க் அறிக்கையின் படி, இந்த வாரம் அமெரிக்காவுக்கு சென்ற இந்திய அதிகாரிகள் கச்சா எண்ணெய் தொடர்பான தங்களது நிலைப்பாட்டை அமெரிக்க அதிகாரிகளிடம் தெளிவாக வலியுறுத்தியுள்ளனர். ரஷ்யாவிலிருந்து இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு எண்ணெய் வாங்குவதை ஒரே நேரத்தில் கட்டுப்படுத்தினால், அது உலகளாவிய விலை உயர்வை தூண்டும் என்று இந்திய அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.
இதற்குப் பதிலாக, ஈரான் மற்றும் வெனிசுலாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய அமெரிக்காவிடம் அனுமதி கேட்கப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. பின்லாந்தின் எரிசக்தி மற்றும் சுத்தமான காற்று ஆராய்ச்சி மையம் (CREA) தரவின் படி, 2022 தொடக்கத்திலிருந்து இந்தியா சுமார் ரூ.13.39 லட்சம் கோடி மதிப்பிலான கச்சா எண்ணெயை ரஷ்யாவிலிருந்து வாங்கியுள்ளது. ரஷ்யாவின் மொத்த ஏற்றுமதியில் இது 20% ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.