2027 உலகக் கோப்பை அணியில் சேர்வது ரோஹித், கோலிக்கு சவாலாக இருக்கும் – கங்குலி கருத்து
2027 ஆம் ஆண்டு நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இடம் பெறுவது கடினம் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
2027 உலகக் கோப்பை போட்டியை தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா நாடுகள் ஒருங்கிணைந்து நடத்த உள்ளன. அப்போது விராட் கோலிக்கு 38 மற்றும் ரோஹித் சர்மாவுக்கு 40 வயதாக இருக்கும்.
இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில், அந்த வயதிலும் இந்திய அணியில் இடம் பிடிப்பது சுலபம் அல்ல. அடுத்த உலகக் கோப்பை வரைக்கும் இந்தியா சுமார் 27 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே பங்கேற்க இருக்கிறது. அதாவது, இருவரும் சுமார் 15 போட்டிகளில் மட்டும் விளையாட வாய்ப்பு கிடைக்கும்.
ரோஹித் மற்றும் விராட் மிகச் சிறந்த வீரர்களே என்பதில் சந்தேகம் இல்லை. இருப்பினும், 2027 வரை அவர்கள் தங்களது உடல் தன்மையை சிறப்பாக பராமரிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அது எளிதானது அல்ல. அதற்கேற்ப அவர்கள் தங்களை சீராகத் தயார் செய்ய வேண்டும் என கங்குலி கூறினார்.
14வது ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் 2027 ஆம் ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற இருப்பதும் குறிப்பிடத்தக்கது.