ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தை விசாரிக்க 5 தனிப்படைகளை அமைத்த போலீசார்… கொலையாளிகளை பிடிக்க தீவிர முயற்சி

0

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். 3 மோட்டார் சைக்கிள்களில் வந்து வழிப்பறி செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் 5 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக ஆம்ஸ்ட்ராங் உள்ளார். 52 வயதான இவர் சென்னை பெரம்பூர் அருகே செம்பியன் பகுதியில் வசித்து வருகிறார். இன்று இரவு 7 மணியளவில் வீட்டின் முன் நின்று சிலரிடம் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாளால் ஆம்ஸ்ட்ராங்கை சரமாரியாக வெட்டியது. பல இடங்களில் அவர் வெட்டப்பட்டார். ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இதையடுத்து, ரத்த வெள்ளத்தில் துடித்த ஆம்ஸ்ட்ராங், கிரீம் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்தார்.

பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த செம்பியம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றி கொலையாளிகளை தேடி வருகின்றனர். ஐஜி அஸ்ரா கர்க் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மோட்டார் சைக்கிளில் தப்பியோடிய கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே பகுஜன் சமாஜ் கட்சியினர் பலர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முன்பு திரண்டனர். கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என போலீசார் முன் கோஷம் எழுப்பினர்.

சம்பவம் நடந்த பகுதியில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முன்பும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பதற்றம் காரணமாக பெரம்பூர் செம்பியம் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகளை போலீசார் அமைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here