ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 8 பேர் அண்ணாநகர் காவல் நிலையத்தில் சரண்… திடீர் திருப்பம்..!?

0

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், சென்னை பெரம்பூரில் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அதன்பேரில் போலீசார் 10 தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங்கை கொன்றதாக 8 பேர் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக ஆம்ஸ்ட்ராங் உள்ளார். 52 வயதான இவர் நேற்று இரவு சென்னை பெரம்பூரில் உள்ள தனது வீட்டின் அருகே நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, ​​அங்கு வந்த மர்ம கும்பல் திடீரென ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் வெட்டியது.

இதை அருகில் நின்றிருந்த நண்பர்கள் தடுக்க முயன்றனர். இருப்பினும், கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை சரமாரியாக வெட்டியது. ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அதன்பின், கண் இமைக்கும் நேரத்தில் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. மேலும் ஆம்ஸ்ட்ராங்கின் நண்பர்கள் 2 பேர் அரிவாளால் வெட்டப்பட்டனர்.

தாக்குதலில் படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங் மற்றும் அவரது நண்பர்கள் இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு கிரிம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் உடனடியாக காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி பெரம்பூர் மற்றும் செம்பியம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஆம்ஸ்ட்ராங் இறந்தார். பிரபல அரசியல் கட்சியின் மாநில தலைவர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங்கை கொன்ற கும்பல் ஆயுதங்களுடன் தப்பிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திடீர் திருப்பமாக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 8 பேர் சரண் அடைந்துள்ளனர். அண்ணாநகர் துணை கமிஷனர் முன்னிலையில் அவர்கள் சரணடைந்தனர். அவர்கள் 8 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களது கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here