ஆம்ஸ்ட்ராங் கும்பல் வெட்டி படுகொலை… ரவுடி ஆற்காடு சுரேஷின் சகோதரர் உட்பட 8 பேர்… யார் யார்..? பின்னணி என்ன..?

0

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று சென்னை பெரம்பூரில் ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில், ரவுடி ஆற்காடு சுரேஷின் சகோதரர் உள்பட 8 பேர் சரண் அடைந்துள்ளனர். இந்நிலையில் அவர்களின் பெயர் மற்றும் பின்னணி குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று சென்னையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனால் சென்னையில் பதற்றம் நிலவுகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பகுஜன் சமாஜ் கட்சி தேசிய தலைவர் மாயாவதி, இன்று சென்னை வந்து அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தவும், குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறவும் எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் மாயாவதி. பகுஜன் சமாஜ் கட்சியை நடத்தி வருகிறார். கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி. இந்த நிலையில்தான் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக ஆம்ஸ்ட்ராங் இருந்தார். அவருக்கு வயது 52.

சென்னை பெரம்பூரில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல் தனது வீட்டின் அருகே நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். இதற்கிடையில், பைக்கில் வந்த Zomoto உணவு விநியோக தொழிலாளர்கள் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங்கின் நண்பர்கள் அவரை மீட்க முயன்றபோது அரிவாளைக் காட்டி மிரட்டினர். இதனால் அவர்களால் ஆம்ஸ்ட்ராங்கை நெருங்க முடியவில்லை. பின்னர் அந்த கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை கொடூரமாக வெட்டி விட்டு பைக்கில் சென்றது. ஆம்ஸ்ட்ராங் ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிருக்கு போராடினார். இதையடுத்து நண்பர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் சிகிச்சைக்காக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் ஆம்ஸ்ட்ராங்கை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது. ஆம்ஸ்ட்ராங் சென்னையின் தலித் தலைவராக அறியப்படுகிறார். இவரும் முன்னாள் கவுன்சிலர் ஆவார். பெரம்பூர் வட்டாரத்தில் இவருக்கு தனிப்பட்ட செல்வாக்கு உள்ளது. அவரது கொலையை கண்டித்து பகுஜன் சமாஜ் கட்சியினர் மற்றும் அவரது உறவினர்கள் சென்னையில் நேற்று இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

இதனால் சென்னையில் நேற்று இரவு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டனர். ஆம்ஸ்ட்ராங்கின் உடல் தற்போது சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9 மணிக்கு பிறகு அவரது உடல் பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். இதற்கிடையில், ஆதரவாளர்களும் கட்சி உறுப்பினர்களும் தொடர்ந்து திரண்டனர். இதனையடுத்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மற்றும் ஆம்ஸ்ட்ராங் வீட்டை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

முன்னதாக, ஆம்ஸ்ட்ராங்கை வெட்டிக் கொன்ற கும்பல் பைக்கில் வேகமாகச் செல்லும் காட்சிகள் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. இதையடுத்து அவர்களை போலீசார் தேடி வந்தனர். கொலையாளிகளை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த சிறப்பு போலீஸ் அதிகாரிகள் தீவிர விசாரணையை தொடங்கினர்.

இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங்கை வெட்டி கொன்றதாக 8 பேர் சென்னை அண்ணாநகர் போலீசில் நேற்று சரண் அடைந்தனர். இதையடுத்து சென்னை அண்ணாநகர் போலீசார் அவர்கள் 8 பேரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் பெயர் பொன்னை பாலு (39), மணிவண்ணன் (25), திருவேங்கடம் (33), திருமலை (45), அருள் (33), ராமு (38), சந்தோஷ், செல்வராஜ் (48) என்பது தெரியவந்தது. ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பிதான் பொன்னை பாலு. அவரது தலைமையில்தான் கொலை நடந்தது

அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் திடுக்கிடும் தகவலை தெரிவித்தனர். அதாவது சில மாதங்களுக்கு முன்பு ரவுடி ஆற்காடு சுரேஷ் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் ஆம்ஸ்ட்ராங்கிற்கு தொடர்பு இருப்பதாக ஆற்காடு சுரேஷ் தரப்பு நம்புகிறது. இதன் காரணமாக ஆம்ஸ்ட்ராங்கை பழிவாங்க திட்டமிட்டனர். இந்த நிலையில் தான் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு தலைமையிலான கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை திட்டமிட்டு கொன்றதாக போலீசாரிடம் தெரிவித்தனர். மேலும் 8 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here