சென்னை மாதவரத்தில் திருவேங்கடம் என்கவுன்டரில் ரவுடி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய திருவேங்கடம் தப்பியோட முயன்ற போது சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து சென்னை வடக்கு கூடுதல் காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் விசாரணை நடத்தி வருகிறார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கனவே 11 பேர் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர், அவர்களில் ஒருவரான திருவேங்கடம் என்கவுண்டரில் கொல்லப்பட்டார்.
பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக, கடந்த ஆண்டு கொல்லப்பட்ட ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு உட்பட 8 பேர் அன்றிரவு கைது செய்யப்பட்டனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டு பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 11 பேரையும் 5 நாள் காவலில் வைக்க போலீஸாருக்கு எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், உண்மையான குற்றவாளிகளை விரைவில் கைது செய்து தண்டிக்க வேண்டும் என அரசியல் கட்சிகளும், ஆம்ஸ்ட்ராங் தரப்பும் கோரிக்கை விடுத்துள்ளன.
ஆம்ஸ்ட்ராங் கொலைச் சம்பவத்தில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் பொன்னை பாலு கொலைக்குத் திட்டமிட்டது யார் என்பது குறித்தும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை மாதவரத்தில் ரவுடி என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலையில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி திருவேங்கடத்துக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடம் விசாரணைக்கு செல்லும் வழியில் தப்பியோட முயன்றபோது கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
சம்பவ இடத்தில் சென்னை வடக்கு கூடுதல் போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் விசாரணை நடத்தி வருகிறார். ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடையதாக கூறப்படும் ரவுடி என்கவுன்டரில் கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனித்தனியாக காவலில் எடுத்துள்ள 11 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி, ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றனர். திருவேங்கடம் ரெட்டேரி பகுதியில் ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பதாகக் கூறி விசாரணை நடத்தி அங்கு அழைத்துச் சென்றபோது, திடீரென திருவேங்கடம் போலீஸாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றதாகவும், போலீஸார் அவரைச் சுட்டுக் கொன்றதாகவும் கூறப்படுகிறது.